சென்னையில் பணிபுரியும் பெண்களே.. அரசே நடத்தும் ஹாஸ்டல்.. அற்புதமான வசதிகள்.. எப்படி அப்ளை பண்ணுவது?
சென்னை: சென்னையில் பணிபுரியும் பெண்களே..அரசின் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகளில் விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா? அங்கு என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளது தெரியுமா? மிககுறைந்த கட்டணத்தில் இந்த வசதிகளை பெற இந்த கட்டுரையை பாருங்கள்.
தமிழ்நாட்டில் முதல்தலை முறை பட்டதாரி பெண்கள் பலர், தங்கள் பெற்றோரை,சொந்த ஊரை பிரிந்து சென்னை, பெங்களூரு, கோவை போன்ற நகரங்களில் இப்போது ஐடி நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அப்படி வரும் பெண்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் இங்கு இருந்தால் மட்டுமே சென்னை போன்ற நகரங்களுக்கு வர முடியும். வந்து வேலை தேடி, வேலை கிடைத்த பின்னர் வீடு எடுத்தோ அல்லது பிஜி எனப்படும் ஹாஸ்டல்களிலோ சேர்ந்து தான் வேலை செய்ய முடியும்.அப்படி அமையும் பிஜிக்கள் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்.

இந்நிலையில் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசே பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகளை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கட்டி உள்ளது. இந்த விடுதிகளில் சேர்ந்து பயன் பெற முடியும். வியாழக்கிழமையான நேற்று சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சரி இந்த விடுதிகள் எப்படி அமைக்கப்பட்டன: பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்க "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்" தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு, புதிய விடுதிகளை கட்டுதல், பழைய விடுதிகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியிலும், திருச்சியிலும் 226 மகளிர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும், சென்னை அடையாறு உள்ளிட்ட இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். உடனடியாக பயன்பாட்டிற்கு வரும் இந்த விடுதிகளில் தங்குவதற்கு www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை அடையாறு,திருச்சி, கூடுவாஞ்சேரி, விழுப்புரம், வேலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் ரூ.16.5 கோடி மதிப்பில் 684 படுக்கைகள் வசதியுடன் விடுதிகளை கட்டி உள்ளது.

விடுதிகளின் சிறப்புகள் என்ன? இந்த விடுதிகளில் பயாமெட்ரிக் நுழைவு, 24 மணி நேர பாதுகாப்பு வசதி, 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு வசதி, இணையதளம் மூலம் முன்பதிவு, பொழுதுபோக்கு அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், wifi வசதி, பகல் நேர குழந்தைகள் காப்பகம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளவசதி போன்றவை உள்ளன. தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களை ஊக்குவிக்கும் வகையிலும் பெண்களின் நிலையை முன்னேற்றும் வகையிலும் சிறப்பு அம்சங்களுடன் புதிதாக இந்த விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications