கொரோனா கால அம்மா உணவகங்கள்... மினி கிளினிக்குகள்... 7.5% இடஒதுக்கீடு... 2020-ன் டாப் 5 நிகழ்வுகள்
சென்னை: தமிழகத்தில் 2020-ம் ஆண்டு கொரோனா ஏற்படுத்திய சோதனைகள் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் ஆறுதல் தரும் அம்சங்களாக மினி கிளினிக்குகள், 7.5% இடஒதுக்கீடு ஆகியவற்றை சொல்லலாம்.
2020-ம் ஆண்டின் ஐந்து முக்கிய நிகழ்வுகள்:
- கொரோனா கால லாக்டவுன் போது வேலைவாய்ப்புகள் பறிபோயின. இந்த சூழ்நிலையில் அம்மா உணவகங்கள்தான் அன்னதான கூடங்களாக ஏழைகளுக்கு அடைக்கலம்தந்தன. 3 வேளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- கொரோனா பரவலின் போதும் பரபரப்பாகவே இயங்கிய சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை. ஆனால் ஒருகட்டத்தில் கோயம்பேடு கிளஸ்டர் என சொல்லும் அளவுக்கு அங்கு வந்து சென்றோர் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் வேறுவழியே இல்லாமல் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. தற்காலிகமான காய்கறி சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டுள்ளது.
- நீட் தேர்வால் கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் மருத்துவ கனவு கானல்நீராகி வருகிறது. இதனை ஓரளவேனும் சரி செய்யும் வகையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% உள் இடஒதுக்கீடு அறிவித்தது தமிழக அரசு. இது உண்மையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகப் பெரும் வர பிரசாதமே. இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் கூட தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
- தமிழகத்தில் 2020-ம் ஆண்டில் நிவர் புயல் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்று. வங்க கடலில் உருவான இந்த நிவர் புயல், புதுவை- மரக்காணம் இடையே கரையை கடந்தது. இது சென்னைக்கு பெருமழையை கொடுத்தது. கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையுடன் பெரும் சேதத்தையும் உருவாக்க்கிவிட்டதுதான் சோகம். நிவர் புயலால் 3 பேர் பலியாகினர். பல ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கிப் பாழாகின.
- தமிழக அரசுகள் அறிவித்த பல்வேறு நலத் திட்டங்களில் மினி கிளினிக்குகளும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குக்கிராமங்களில் உருவாக்கப்பட்ட இந்த 2,000 மினி கிளினிக்குகள் இந்தியாவில் முன்னோடி திட்டமாக சொல்லலாம். இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் உள்ளனர்.