வச்ச குறி தப்பாது..நத்தம் விஸ்வநாதனுக்கு பெரிய சிக்கல்! சசிகலா வைத்த செக்.. பாமக வேட்பாளர் பின்னணி!
சென்னை: 2026 தேர்தல் களம் ஐந்து முனை போட்டியால் பரபரப்பாக இருக்கிறது அதிமுக முக்கிய புள்ளிகளை குறிவைத்து சசிகலா சில தொகுதிகளில் வேட்பாளர்களை களத்தில் இறக்கி இருக்கிறார். சமுதாய ஆதரவு உள்ளிட்டவற்றால் அதிமுக வேட்பாளர்களுக்கு சசிகலா ராமதாஸ் கூட்டணியின் வேட்பாளர்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் மிக மூத்த சீனியர்களில் ஒருவரான நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து 28 வயதேயான ராஜசேகரன் போட்டிருக்கிறார். வன்னியர் சமூக வாக்கு, முக்குலத்தோர் ஆதரவு, சிறுபான்மை வாக்கு என பல தரப்பு வாக்குகள் செல்வதால் நத்தம் விஸ்வநாதனின் வாக்கு வங்கி சரிய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக சட்டசபை தேர்தல் களம். சொல்லப்போனால் கோடை வெயிலை விட தேர்தல் ஜுரம் அதிகரித்துக் காணப்படுகிறது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாத கோடை வெயிலிலும் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்பாளர்கள் சீனியராக இருந்தாலும் ஜூனியர் ஆக இருந்தாலும் இந்த தேர்தலில் வென்றால் தான் தங்கள் அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்பதால் அனைவருமே சீரியஸாக வேலை பார்த்து வருகின்றனர். திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி, நாம் தமிழர் தமிழக வெற்றிக் கழகம், சசிகலா ராமதாஸ் கூட்டணி என ஐந்து முனை போட்டி இந்த தேர்தலில் நிலவுகிறது.

2026 சட்டசபை தேர்தல்
ஆளும் கட்சி என்ற பலத்தோடு திமுக தேர்தலை சந்திக்கும் நிலையில், ஆட்சிக்கு எதிரான மனநிலை, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என பல விமர்சனங்களை முன்வைத்து ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது அதிமுக. ஆனால் அதிமுக கூட்டணியை எந்த காரணத்தைக் கொண்டும் வெற்றி பெற்று விடக்கூடாது என முனைப்போடு களமிறங்கி இருக்கும் கூட்டணி தான் சசிகலா ராமதாஸ் கூட்டணி. தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வங்கி அதிகமாக இருக்கும் பகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் சசிகலா.
சசிகலா ராமதாஸ் கூட்டணி
வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் ராமதாஸ். அந்த வகையில் அதிமுகவின் மிக முக்கிய சீனியர்களில் ஒருவரான நத்தம் விஸ்வநாதன் எதிர்த்து களத்தில் இறக்கப்பட்டு இருப்பவர்தான் ராஜசேகரன். அய்யா பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆன பரசுராமனின் மகன் தான் ராஜசேகரன். 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட தற்போது திண்டுக்கல் தொகுதியில் களமிறங்கியவர் பரசுராமன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்திருக்கிறார். அவரது தாயார் ஒன்றிய கவுன்சிலர்.
ராமதாஸ்
பாமாக பிளவு பட்டபோது ராமதாஸ் பக்கம் நின்ற பரசுராமன் பாமக துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. இந்த தேர்தலில் திண்டுக்கல்லில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலா ஆதரவாளர் ராமு தேவர் என்பவரை சசிகலா களம் இறக்கி இருக்கிறார். இந்த நிலையில் பரசுராமன் வசிக்கும் நத்தம் தொகுதியிலேயே அவரது மகனை களம் இறக்கி இருக்கிறார் ராமதாஸ்.
நத்தம் விஸ்வநாதன்
இதில் தான் நத்தம் விஸ்வநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் முத்தரையர் அமைப்பைச் சேர்ந்த செல்வகுமார் களமிறங்குகிறார். உதயசூரியன் சின்னத்திலேயே அவர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் அழகம்மாள், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ரமேஷ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
ராஜசேகரன்
சசிகலா ராமதாஸ் கூட்டணியில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்குபவர் தான் ராஜசேகரன். 28 வயதான அவர் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி விட போகிறார் என்பது தெரியாத நிலையில் தற்போது நத்தம் மிஸ்வநாதனுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக அதிமுகவினரை சொல்கின்றனர்.
முக்குலத்தோர் வாக்கு
இது தொடர்பாக அவர்களிடம் பேசிய போது," தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளும் வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகளும் ராமதாஸ் சசிகலா கூட்டணி இருக்கிறது. ஆனால் திண்டுக்கல்லில் நத்தம் தொகுதியில் இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வசிப்பது குறிப்பிடத்தக்கது. நல்லாம்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, சிறு நாயக்கன்பட்டி, வெள்ளோடு, புகையிலைப்பட்டி, கொசவபட்டி, ராஜகாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வன்னியர் சமுதாய வாக்குகள் இருக்கிறது.
வன்னியர் வாக்குகள்
கிட்டத்தட்ட 52,000 வாக்குகள் வரை அங்கு இருக்கிறது. மேலும் கிறிஸ்தவ வன்னியர், இந்து வன்னியர் என இரு பிரிவுகள் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் முக்குலத்தோர் வாக்குகளும் கணிசமாக இருக்கிறது. தற்போது அம்பலகாரர் எனப்படும் முத்தரையர் ஓட்டுகள் செல்வகுமாருக்கு செல்வதால் அதை நம்பி இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் நத்தம் விஸ்வநாதன் இதுவரை காப்பாற்றி வந்த முக்குலத்தோர் ஓட்டுகள் சசிகலாவாலும், வன்னியர் ஓட்டுகள் ராமதாஸால் உடைபடுவது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
திமுக வேட்பாளர்
இது மட்டுமல்லாமல் திமுக வாக்குகள் சிலவும் பாமக அய்யா பாமக தரப்புக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. காரணம் திமுக தரப்பில் உதயசூரியன் சின்னத்தில் செல்வகுமார் போட்டியிட்டாலும், நான் ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து வந்தவன் என பேசியது நத்தம் பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவ சமுதாய மக்களை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கடைசி வரை அவர் மாற்றப்படவில்லை. ஆனால் இந்த வாக்குகள் செல்வகுமாருக்கு செல்லாது என்றாலும் நத்தம் விஸ்வநாதனுக்கும் போகாது.
அய்யா பாமக
காரணம் அங்கு பாஜக இருக்கிறது, இதனால் மூன்றாம் வாய்ப்பாக தமிழக வெற்றி கழகம்ம் நாம் தமிழர் மற்றும் அய்யா பாமகவுக்கு இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை வாக்குகள் செல்லலாம் என சொல்லப்படுகிறது. இப்படி தான் நத்தம் வேட்பாளர்கள் தற்போது அவருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வெற்றி தோல்வி யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்கு வித்தியாசம் அளவுக்கு வாக்குகள் உடைபடும். கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தல் நத்தம் விஸ்வநாதனுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர்.














Click it and Unblock the Notifications