ஒரு தலை காதல்.. கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த இளைஞர் நள்ளிரவில் அதிரடியாக கைது
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞர் சதீஷ் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்,
இவர்களது மகள் சத்யா(20). இவர் தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர் சத்யாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

கல்லூரி
இந்த நிலையில் வழக்கம்போல் ரயிலில் கல்லூரிக்கு செல்லும் சத்யாவிடம் அடிக்கடி வந்து சதீஷ் தனது காதலை சொல்லியுள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் சத்யா, சதீஷின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை திநகரில் உள்ள கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு சத்யா வந்துள்ளார்.

சதீஷ்
அப்போது அங்கு சதீஷ் காத்திருந்தார். உடனே சத்யாவிடம் போய் தன் காதலை ஏற்குமாறு தெரிவித்தார். ஆனால் அவரோ தன்னால் காதலை ஏற்க முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் சதீஷின் தலைக்கு ஏறியது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. அப்போது தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் வந்து கொண்டிருந்தது.

ஓடும் ரயில்
உடனே சதீஷ் , சத்யாவை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டார். இதில் தலை தனியாக உடல் தனியாக துண்டாக்கப்பட்டு அதே இடத்தில் சத்யா துடிதுடித்து இறந்தார். சத்யாவை தள்ளிவிட்டுவிட்டு சதீஷ் தப்பியோடிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நடந்த சம்பவத்தை ரயில்வே போலீஸாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸார் பிரேதத்தை பறிமுதல் செய்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சதீஷை பிடிக்க தனிப்படை
இந்த நிலையில் தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. துரைப்பாக்கத்தில் சதீஷ் பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அவரை நள்ளிரவு கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு தலைக்காதலை ஏற்க மறுத்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications