"ஏம்பா.. பஜ்ஜி சரியில்லையே".. கஸ்டமரை கத்தியால் வெட்டிய கடைக்காரர்.. சென்னையில் பரபரப்பு!
இளைஞரை கத்தியால் குத்திய பஜ்ஜி கடைக்காரரால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை: "பஜ்ஜி நல்லாவே இல்லையே.." என்று ஆரம்பித்த பேச்சு கடைசியில் வெட்டு குத்து வரை சென்றுவிட்டது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ஞானமணி. சவுகார்பேட்டையில், ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் ஞானமணி வேலை முடிந்து, சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் உள்ள ஒரு பஜ்ஜி கடைக்கு சென்றார். கூடவே நண்பன் சீனிவாசனையும் அழைத்து கொண்டு போனார்.

கடையில் வடமாநிலத்தை சேர்ந்த அருண் என்பவர் பஜ்ஜி போட்டு கொண்டிருந்தார். அதனை வாங்கி சாப்பிட்ட ஞானமணி, பஜ்ஜி சரியாயில்லை என்று கடைக்காரரிடம் சொல்லவும், ஞானமணியை அருண் தகாத முறையில் திட்டியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஞானமணி, அருணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.. இதை கொஞ்சமும் எதிர்பாராத அருண், கையில் வைத்திருந்த வெங்காயம் வெட்டும் கத்தியால் ஞானமணியின் தலையில் வெட்டிவிட்டார்.
இதில் காயம் பலமாக ஏற்பட்டு ஞானமணி தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஞானமணியை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. தகவலறிந்து பூக்கடை போலீசார் அருணை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
மேலும் கடைப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டும் விசாரணை நடந்து வருகிறது. பஜ்ஜி சரியில்லை என்று சொல்லியதற்காக கத்திகுத்து வரை போன இந்த சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications