போலீஸை கண்டதுமே 'யூ-டர்ன்' எடுத்த இளைஞர்கள்.. பின்னாடியே விரட்டி சென்று பார்த்தால்.. சென்னையில் ஷாக்
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்
சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் திருட்டு பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து விதி மீறல் குற்றங்கள் குறையும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர். இந்த சட்டத்தின்படி விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. உதாரணமாக இதற்கு முன்னர் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதமாக இருந்த நிலையில் புதிய சட்டத்தின் படி இது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது.
அதேபோல சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த போலீஸார் 24/7 முறையில் ஆய்வு பணியில் களம் இறங்கினர். இதில் ஏராளமான திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன. அதேபோல போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களும் குறைந்தன.

பெரியமேடு
இப்படி இருக்கையில், திங்கட்கிழமையன்று சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பைக்குகளை மடக்கி விசாரிக்க முயன்றனர். ஆனால் போலீஸாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் விடாத போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

பட்டா கத்தி
அதேபோல பைக்கில் பட்டா கத்தி, அருவா உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளன. இதனையடுத்து மூவரையும் பெரியமேடு காவல் நிலைத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு வைத்து தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் மீஞ்சூரில் ஒருவரை கொலை செய்ததாகவும், எனவே எதிர் தரப்பினர் தங்களை எப்போது வேண்டுமானாலும் தாக்க கூடும் என்பதால் தற்காப்புக்காக ஆயுதங்களை கையில் வைத்து சுற்றிக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

பிளான்
இருப்பினும் இவர்கள் கூறியதில் சில விஷயங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் மூவரையும் தனித்தனியாக விசாரிக்க தொடங்கினர். இவ்வாறு விசாரிக்கையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, இவர்கள் சென்னையில் தங்களுடைய எதிரி குரூப்பை சேர்ந்த ஒரு முக்கியமான நபரை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளனர். இதற்காக பைக்குகளை வெவ்வேறு பகுதிகளிலிருந்து திருடியுள்ளனர். இந்த பிளானுக்கு தலைமையாக ஆறுமுகம் ராஜா (23) என்பவர் செயல்பட்டுள்ளார்.

கைது
இதனையடுத்து அவருடன் வந்த மற்ற இரண்டு இளைஞர்கள் டில்லி பாபு (19), சத்திவேல் (19) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சென்னையின் மையமாக இருக்கும் பெரியமேடு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இந்த ஒட்டு மொத்த பிளானுக்கும் மூளையாக உள்ள நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications