மாரிதாஸுக்கு ஜெயில்.. டிசம்பர் 23ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
மாரிதாசுக்கு டிசம்பர் 23 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
சென்னை: திமுக அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டதற்காக, கைதான யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Recommended Video
குன்னூரில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது... அதில் அவர் உட்பட அவரோடு பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர்.
இந்திய விமானப் படை இதை விபத்து என்று உறுதி செய்துள்ளது.. ஆனால், யூட்யூபர் மாரிதாஸ் இதை பற்றி வேறு விதமான கருத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்..

ஆதரவாளர்கள்
முதலில், "திக, திமுக ஆதரவாளர்கள் பலரும் விபத்தில் ராணுவ தளபதி மரணத்தை கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி போடுவதைக் காண முடிகிறது... ஒவ்வொரு முறையும் இதை செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை" என்று தெரிவித்திருந்தார்.

காஷ்மீர்?
இதற்கு அடுத்தபடியாக, நேற்று மற்றொரு பதிவு போட்டிருந்தார்.. அதில், "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னுமொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்துக்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதிவேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டார்.. ஆனால், உடனே அந்த பதிவை நீக்கிவிட்டார்.

விவாதங்கள்
எனினும் மாரிதாஸ் பதிவிட்ட இந்த கருத்து, சோஷியல் மீடியாவில் தீயாக பரவியது.. விவாதங்களை கிளப்பியது.. போலீசுக்கும் இந்த பதிவு குறித்த தகவல்கள் சென்றன... மேலும், மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலசுப்ரமணியன் சைபர்கிரைம் போலீசிலும் புகார் அளித்தார். இதையடுத்து, மாரிதாஸை விசாரணைக்கு அழைத்து வர அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர்..

ஆதரவாளர்கள்
ஆனால், அதே சமயத்தில், மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பாஜகவினரும், மாரிதாசின் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர்... இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.. அப்போது மாரிதாஸ் அங்கிருந்த சில பாஜகவினர், ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.. அப்போது, தன்னுடைய காரிலேயே மாரிதாஸை ஸ்டேஷன் வரை அழைத்துவருவதாக மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தெரிவித்தார்.. அதன்படியே அவரது காரில் போலீஸார் மாரிதாஸை ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

வழக்கு பதிவு
இதையடுத்து, பாஜக ஆதரவாளரான மாரிதாஸை பொது அமைதியை சீர்குலைத்தல், தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.. முதல்கட்ட விசாரணை முடிந்து அவர் கோர்ட்டில் மாரிதாஸ் ஆஜர்ப்படுத்தப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர். அதன்படியே, மாரிதாஸ் மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்... அவரை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.. பிறகு, மாரிதாஸ் உத்தமபாளையம் கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சர்ச்சைகள்
தமிழ்நாட்டின் யூடியூபர்களில் முக்கியமானவர் மாரிதாஸ்... இவரது வீடியோக்கள் பெரும்பாலும் சர்ச்சையை கிளப்புவதாகவே இருக்கும்.. திமுக ஆட்சி அமைத்தபிறகு, சோஷியல் மீடியாவில் அவதூறு பரப்புவர்கள் மீது கடிவாளம் போடப்பட்டு வருகிறது.. அந்த வகையில், யூடியூப்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட, கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன், மதன் போன்றோரை கைதாகியபோதும், மாரிதாஸை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகி கொண்டே வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications