புழல் சிறையில் சிக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன்.. அக்.30 வரை நீதிமன்ற காவல் - ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: நெடுஞ்சாலையில் வேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 வரை சிறையில் அடைக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜாமின் கேட்டு பலமுறை கோர்ட் கதவை தட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அடுத்தது என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார் டிடிஎப் வாசன்.
Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். பைக் சாசகம் செய்து அதை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளவர் டிடிஎப் வாசன். மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் டிடிஎஃப் வாசன். கடந்த மாதம் 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1இல் ஆஜர் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார் டிடிஎப் வாசன். அந்த ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை எனவும், புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டு தாக்கல் செய்த தனது மனுவில்
தான் அப்பாவி என்றும், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும்... அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி கூறியிருந்தார்.
இதனிடையே டிடிஎப் வாசனின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. அவர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வரும் 30ஆம் தேதி வரைக்கும் டிடிஎப் வாசனின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே டிடிஎப் வாசனின் ஜாமின் மனு மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது நீதிமன்ற காவல் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பாவது டிடிஎப் வாசனுக்கு ஜாமின் கிடைக்குமா? பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications