இந்த முறை பிரச்சனை டிடிஎஃப் வாசனுக்கு இல்ல.. செல்லப் பிராணிகள் கடைக்கு.. வனத்துறை அதிரடி ரெய்டு!
சென்னை: ஒரு வீடியோவில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பேசிய பேச்சால், சென்னை திருவொற்றியூரில் செல்லப் பிராணிகள் விற்கும் கடை சிக்கியுள்ளது. பாம்புக்கு கூண்டு வாங்கியதாக வாசன் வீடியோவில் கூறியிருந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அங்கு சோதனை செய்து அரிய வகை கிளி மற்றும் ஆமையை கைப்பற்றி உள்ளனர்.
சர்ச்சைகளில் சிக்குவதையே வழக்கமாக வைத்திருக்கிறார் யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் பிரச்சனையில் போய் சிக்குவதில்லை, பிரச்சனை தான் இவர்கிட்ட சிக்கிக்குது எனக் கூறும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவ்வப்போது சிக்கலில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் டிடிஎஃப் வாசன்.

பைக் சாகச வீடியோக்களை பதிவிட்டு யூடியூப்பில் பிரபலமான டிடிஎப் வாசனுக்கு ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் ரசிகர்களாக உள்ளனர். முன்பு காஞ்சிபுரம் பகுதியில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டிடிஎஃப் வாசனின் பைக் லைசென்சும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, டிடிஎஃப் வாசனின் பைக்கை ஏன் தீயிட்டு கொளுத்தக்கூடாது? அவரது சேனலை ஏன் நிரந்தரமாக மூடக்கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். ஒரு மாத காலம் ஜெயிலில் இருந்த டிடிஎஃப் வாசன், பின்னர், பைக்குகளுக்கு தேவையான உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை திறந்தார்.
இதனைத்தொடர்ந்து டிடிஎப் வாசன் காரில் பயணம் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டார். அப்போது செல்போனில் பேசியபடி காரை ஓட்டினார். இதிலும் அவரே வீடியோ வெளியிட்டு சிக்கினார். இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கார் லைசென்சையும் முடக்கினர்.
திருப்பதி சென்ற டிடிஎப் வாசன் அங்கிருந்த பக்தர்களின் மனதை புன்படுத்தும் படி நடந்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும்,'மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி பின்னர் அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் டிடிஎஃப் வாசன். மற்றொரு படம் ஒன்றில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது கையில் பாம்பு ஒன்றை சுற்றியபடி யூடியூபில் வீடியோ வெளியிட்டார் டிடிஎஃப் வாசன். 2 வயதாகும் அந்த பாம்பிற்கு பப்பி எனப் பெயரிட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றபோது பார்த்ததாகவும், அங்கு இருந்து கொண்டு வந்ததாகவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். கையில் சுற்றியிருக்கும் அந்த பாம்பிற்கு முத்தம் கொடுத்து அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார்.
பாம்பை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வனத்துறை ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சட்ட வல்லுநர்கள் ஆலோசனையோடு வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றே தான் பாம்பை வீட்டில் வளர்த்து வருவதாக வாசன் தெரிவித்துள்ளார்.
இதனால் டிடிஎஃப் வாசன் தப்பித்திருந்தாலும், அவர் வீடியோவில் சொன்ன ஒரு தகவலால், சென்னை திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வனத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. டி.டி.எப் வாசன் கையில் பாம்பு உடன் வெளியிட்ட வீடியோவில், சில நாட்களுக்கு முன்பு இங்கு, தனது பாம்புக்கு கூண்டு வாங்கிச் சென்றதாகவும், பாம்பும் விற்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.
அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடையில் இன்று வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அரியவகை கிளி மற்றும் ஆமையை கைப்பற்றி உள்ளனர்.












Click it and Unblock the Notifications