எடப்பாடி “ரிடர்ன்ஸ்” - பந்தாடப்படும் அதிமுக! “ஜிக் ஜாக்” தீர்ப்புகள்! தலைகள் டூ இலைகள் “குழப்பம்”
சென்னை: அதிமுகவின் முதல் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு தொடங்கி இன்று வெளியான தீர்ப்பு வரை ஒருமுறை எடப்பாடி பழனிசாமிக்கும் மறுமுறை ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சாதகமாக மாறி மாறி தீர்ப்புகள் வெளியாகி இருக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பின்னர் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் செய்து முதலமைச்சர் பதவியை துறந்தார். அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக சசிகலா தரப்பால் தேர்வு செய்யப்பட்டார். 6 மாதங்கள் தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் டெல்லியின் தலையீட்டால் முடித்துகொள்ளப்பட்டது.
ஆட்சி எடப்பாடிக்கு, கட்சித் தலைமை தனக்கு என்ற ஒப்பந்தத்தில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தலைமை பொறுப்பை ஏற்றார். ஆனால், கட்சியின் அதிகாரம், தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரது ஆதரவும் எடப்பாடிக்கே அதிகம் இருந்ததால் ஓ.பன்னீர்செல்வத்தால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியவில்லை. 2021 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் விரும்பிய ஓபிஎஸின் திட்டமும் நிறைவேறவில்லை.
போடுங்கண்ணே வெடிய.. ஆதரவாய் வந்த தீர்ப்பு! எடப்பாடி ஹாப்பி அண்ணாச்சி! குதூகலமான அதிமுக தொண்டர்கள்!
முதல் தீர்ப்பு
இந்த நிலையில்தான், கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதிமுகவில் எடப்பாடியை ஒற்றைத் தலைமையாக்குவது என்ற அவரது ஆதரவாளர்களின் திட்டத்தை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழுவுக்கு எதிராகவே நீதிமன்றத்தில் தடைகோரியது. ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு முதல்நாள் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என தீர்ப்பளித்தது. இது எடப்பாடிக்கு சாதகமாக அமைந்தது.
2 வது தீர்ப்பு
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மனுவை நள்ளிரவில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. அதில் பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் ஆனால், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
3 வது தீர்ப்பு
இதனை அடுத்து ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11 ஆம் தேதி புதிய பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தது. இதனை எதிர்த்து மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, பொதுக்குழு நடைபெறும் நாளன்று தீர்ப்பை வெளியிட்டது. அதில் பொதுக்குழுவை கூட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
4 வது தீர்ப்பு
இதன் தொடர்ச்சியாக ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 17 ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வெளியிட்டார். அதில், ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
5 வது தீர்ப்பு
இதனால் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, ஓ.பி.எஸ். நீக்கம் ஆகியவை செல்லாமல் போனது. அதிகாரங்கள் மீண்டும் ஓ.பி.எஸ். வசமாயின. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பை வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக மாறியுள்ளதுடன் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக உறுப்பினர் பொறுப்புக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.