கொலைக் களமாகும் கோவை.. தலைக்கேறிய மதுபோதையில்.. இளைஞர் பாட்டிலால் அடித்துக் கொலை
கோவை: கோவை மாவட்டம், ஈச்சனாரி - செட்டிபாளையம் சந்திப்பில் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக சப்தத்துடன் பாட்டு கேட்டதால் ஆத்திரமடைந்த நபர் இந்த வெறிச் செயலை செய்துள்ளார்.
கோவை மாவட்டம், ஈச்சனாரி செட்டிபாளையம் சந்திப்பில் சத்தியமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த ஒரு மாதமாக ஆறுமுகம் என்பவர் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அதே கடையில் கேரளத்தைச் சேர்ந்த சியாஸ் என்ற இளைஞரும் ஒரு வாரமாக ஓட்டுநர் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பணி செய்து வரும் இடத்திற்கு மேல் உள்ள தனித்தனி அறையில் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு மது போதையில் கேரளாவைச் சார்ந்த சியாஸ் என்பவர் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மது போதையில் இருந்த ஓட்டுநர் ஆறுமுகம் அவர் அறைக்குச் சென்று ஏன் சப்தமாக வைத்துள்ளாய் என்று தட்டி கேட்டதில் இரு நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சியாஸ், ஆறுமுகத்தை மார்பு மற்றும் தலை பகுதிகளில் பலமாக தாக்கியதோடு, பாட்டிலால் தலையிலும் அடித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உரிமையாளர் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து தாக்கப்பட்ட ஆறுமுகத்தை சுந்தராபுரம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆறுமுகத்துக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 03:00 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சியாஸ் என்பவரையும் தேடி வருகின்றனர். மதுபோதையில் இளைஞர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, அன்னூர் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் காளிமுத்து என்பவரை மதுபோதையில் லாரி ஓட்டுநர்கள் இரும்பு ராடால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சரக்குகளை லாரி மூலமாக ஏற்றி வந்துள்ளனர். இந்த லாரியை ஓட்டுநர்கள் சரவணக்குமார் மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஓட்டி வந்துள்ளனர். கருமத்தம்பட்டி, அன்னூர் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்பு லாரியை திருப்ப முயன்றுள்ளனர். அப்போது, விபத்து ஏற்படுத்தும் வகையில் லாரியை இயக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்த பங்க் ஊழியர் காளிமுத்து ஓட்டுனரை எச்சரித்துள்ளார். இதனால், லாரி ஓட்டுநர்கள் மற்றும் பங்க் ஊழியர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், லாரி ஓட்டுநர்கள் இருவரும் அப்பகுதியில் இருந்து சென்றுள்ளனர். தொடர்ந்து, இரவு 12 மணியளவில் ஓட்டுநர்கள் இருவரும் பெட்ரோல் பங்கிற்கு திரும்பவந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர் காளிமுத்துவை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில், காளிமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
காளிமுத்துவை கொலை செய்துவிட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் லாரி ஓட்டுநர்கள் தலைமறைவாகி உள்ளனர். காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த ஓட்டுனர்களை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்வதற்காகச் சென்றபோது அவர்கள் இருவரும் தப்ப முயன்றுள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்ததில் இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications