பட்டப்பகலில் என்ன தைரியம்.. காருக்குள் புகுந்து 1 கிலோ தங்கம்.. அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
கோவை: கோவையில் இருந்து திருச்சூருக்கு கார் மூலம் நகை வியாபாரி கொண்டு சென்ற 1.25 கிலோ தங்கக் கட்டிகளை காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஹவாலா பணம், தங்க நகைகள் உள்ளிட்டவை சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுவதும், அந்த கும்பல்களை நோட்டமிட்டு கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் கோவை வந்த நகை வியாபாரியை நோட்டமிட்டு, காரின் கண்ணாடியை உடைத்து 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேகப். இவர் திருச்சூரில் ஜே.பி. ஜுவல்லரி என்ற நகைக் கடையை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கான நகைகளை கோவை மற்றும் சென்னையில் ஆர்டர் கொடுத்து வாங்கி வருவது வழக்கம். சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள நகைக் கடையில் தங்கத்தை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஜெய்சன் மற்றும் அவரது கடையில் பணியாற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள மொத்த நகைக் கடைகளில் நகைகளை கொடுத்துவிட்டு, 1.25 கி.லோ எடையுள்ள தங்கக் கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர், ஜெய்சனும், விஷ்ணுவும் சென்னையில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளனர்.
பின்னர், கோவை ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சூரை நோக்கி இருவரும் சென்றுள்ளனர். அவர்களுடைய கார் மதுக்கரையை அடுத்த க.க.சாவடி எல்லை மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, அவர்களது காரை மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வழிமறித்துள்ளனர். பதறிப்போன ஜெய்சன் காரின் கதவையும், ஜன்னலையும் திறக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, அந்த கொள்ளையர்கள் ஜெய்சன் சென்ற காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று காரை கடத்தி சிறிது தூரம் சென்றனர். பின்னர், காரில் இருந்து ஜெய்சன் மற்றும் விஷ்ணுவை கீழே இறக்கிவிட்டு விட்டு காருடன் தங்கக் கட்டிகளை கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து, ஜெய்சன் க.க.சாவடி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
உடனடியாக தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனாலும், கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, கேரளாவிற்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளிலும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கோவை ரயில் நிலையம் மற்றும் கேரளா செல்லக்கூடிய சாலைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கொண்டும் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் காருக்குள் புகுந்து தங்கக் கட்டிகள் காருடன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications