சொந்த தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை கடன்.. கோவை ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்
கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், ராணுவத்தில் பணியின் போது உயிரை இழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு உதவும் வகையில் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக விளங்கி வருகிறது. அதிக வருவாய் வழங்கும் மாவட்டமாகவும், தொழில் நகரமாகவும் விளங்கி வருகிறது. தொழில் செய்பவர்களின் முதல் தேர்வாகவும் கோவை மாவட்டமே உள்ளது. மாறி வரும் காலத்திற்கு ஏற்ப புது புது தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும் ஊராக உள்ளது. பல்வேறு துறைகளில் தலைசிறந்து இருக்கும் கோவை நகரில் வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

அதன்படி, கோவையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பான அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதற்கான அறிவிப்பை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தொழில்களுக்கு கடன் வழங்கும் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படவுள்ளது. முன்னாள் படைவீரர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் 78 ஆவது சுதந்திர தினத்தன்று ஆற்றிய சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒருகோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். முன்னாள் படைவீரர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
எனவே, சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் அல்லது படைப் பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஆகியோர் முன்னாள் படைவீரர் எண், தரம், பெயர், முகவரி, கைபேசி எண், வயது, செய்ய விரும்பும் சுயதொழில் குறித்த விவரம், அதன் முன் அனுபவம் மற்றும் கடன் பெற உத்தேசித்துள்ள தொகை ஆகிய விவரங்களுடன் கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நலஅலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 10 ஆம் தேதியாகும். எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைப் பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில் தொடங்கி பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications