புருவம்தான் தெரிஞ்சது.. கண்,வாயிலலாம் மண்ணு.. மேட்டுப்பாளையம் விபத்தில் தந்தையை இழந்த சிறுமி கண்ணீர்
Recommended Video
கோவை: மேட்டுப்பாளையம் விபத்தில் உயிரிழந்த செய்தி கேட்டு வந்து பார்த்தபோது அவரது புருவம் மட்டுமே தெரிந்தது என 5ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் கூறியது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. இந்த பேய் மழையால் 20 அடி உயர சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த சுவரை கட்டிய ஜவுளி கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியனை போலீஸார் இன்று கைது செய்தனர்.

தலா 4 லட்சம்
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த 17 பேருக்கும் தலா ரூ 4 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்தது. எனினும் இந்த நிவாரணம் போதாது என உறவினர்கள் தெரிவித்தனர். நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கக் கோரியும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்
இந்த விபத்தில் குருசாமி (45) என்பவர் உயிரிழந்துவிட்டார். தற்போது இருந்த வீடும் தரைமட்டமாகவிட்டதால் அவரது மனைவி சுதாவும் இரு குழந்தைகளும் இருக்க இடமின்றி மாற்று துணியின்றி நிர்கதியாய் நிற்கின்றனர். இதுகுறித்து அவரது மனைவி சுதா கூறுகையில் எங்களை ஞாயிற்றுக்கிழமை இரவு கோவையில் விட்டுவிட்டு மேட்டுப்பாளையத்துக்கு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

போன் ஸ்விட்ச் ஆப்
அவர் கூலி வேலை செய்வதால் நீண்ட தூரம் செல்ல மேட்டுப்பாளையத்தில் தங்குவதுதான் வசதி என்பதால் அங்கு தங்கினார். மேலும் தன்னை அதிகாலை 4.30 மணி எழுப்புமாறும் கூறியிருந்தார். அதனால் நான் 4.30 மணிக்கு போன் செய்தேன். போனை அவர் எடுக்கவில்லை. பின்னர் 5 மணிக்கு கூப்பிட்டேன். அப்போது போன் ஸ்விட்ச் ஆப் என வந்தது.

துணிமணி இல்லை
இதையடுத்து சார்ஜ் போடாமல் விட்டிருப்பார் என நினைத்தேன். ஆனால் 7 மணிக்கு வீடு இடிந்த தகவல் கிடைத்தது. அப்போதும் அவருக்கு லேசாக காயம் ஏதும் ஏற்பட்டிருக்கும் என்றே நினைத்தோம். ஆனால் இடிபாடுகளில் இருந்து எனது கணவரின் சடலத்தைதான் முதலில் எடுத்தனர். அரசு அளித்த அத்தனை சான்றிதழ்களும் போய்விட்டன. வீடு, துணிமணிகளின்றி இரு குழந்தைகளுடன் நிர்கதியாய் நிற்கிறேன்.

அரசு வேலை
அரசாங்கம் எனக்கு வேலையும் வீடும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார். இதுகுறித்து குருசாமியின் 5-ஆம் வகுப்பு படிக்கும் மகள் கூறுகையில் ஊருக்கு வந்து அப்பா காசு கொடுத்தார். அப்புறம் கோயமுத்தூருக்கு வேலை செல்வதாக கூறினார். திங்கள்கிழமை காலை 7 மணிக்கு ஒருவர் போன் செய்து விஷயத்தை கூறினார்.

மண்ணு இருந்தது
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தோம். புருவம் மட்டுமே தெரிந்தது. முகமே வேறு மாதிரி இருந்தது. கண், வாயில் மண் இருந்தது. நான் 5-ஆவது படிக்கிறேன். எனக்கு ஒன்னுமே இல்லை. இப்போது நான் போட்டுனு இருக்கிறதும் பக்கத்து வீட்டு அக்காவுடைய துணி என்று அந்த குழந்தை அழுதவாறே கூறினார்.












Click it and Unblock the Notifications