ஊட்டியில் துவங்கிய 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு! மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு! நோக்கம் இதுதான்
கோவை: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய மாநாடு நடக்கிறது. இதில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பாகவத் முக்கிய அறிவுரைகளை வழங்க உள்ளார். மேலும் இந்த மாநாட்டின் நோக்கம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் இந்த அமைப்பு சார்பில் மாநாடுகள், ஆலோசனை கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இருப்பினும் நீதிமன்றம் வரை சென்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய மாநாடு நேற்று துவங்கியது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிராண்ட் பிரசாரக் பைதக் என்ற பெயரில் இந்த மாநாடு துவங்கி உள்ளது. நேற்று துவங்கிய இந்த மாநாடு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடு, செயல்பாட்டில் உள்ள பிரச்சனை, எதிர்கால வியூகம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட உள்ளது. மேலும் நூற்றாண்டு செயல் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபெலே, கிருஷ்ண கோபால், மண்மோகன் வைத்யா, முகுந்த், அருண்குமார், ராம்தத் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதுதவிர மாநாட்டில் பங்கேற்க பல மாநிலங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் ஊட்டிக்கு படையெடுத்துள்ளனர். நாளை மாநாட்டின் இறுதி நாளாகும். அன்று மோகன் பாகவத் மற்றும் தத்தாத்ரேய ஹோசபெலே உள்ளிட்டவர்கள் நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்க உள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜகவுடன் முதன்மையான இயக்கமாக உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின. ஆனால் இதனை நிர்வாகிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். அதாவது இந்த மாநாடு என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக மட்டுமே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications