“பானிபூரி” கடையையுமா? இந்து முன்னணி “அட்ராசிட்டி” -கோவையில் வட மாநிலத்தவர் மீது அட்டாக்! 4 பேர் கைது
பானிபூரி கடை நடத்தி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மோனோ, ஷேக் சவான் ஆகியோரையும் இந்து முன்னணியை சேர்ந்த சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கி இருக்கிறார்கள்.
கோவை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் அடித்து கொல்லப்பட்டதாக பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் வதந்தி பரப்பப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் ஓயாத சூழலில், கோவையில் இந்து முன்னணியை சேர்ந்த கும்பல் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கௌதம் சியாமல். புலம் பெயர் தொழிலாளியான இவர் கோவையில் தனது வட மாநில நண்பர்களுடன் தங்கி பணிபுரிந்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் இவர் கோவை இடையர் தெருவில் ஜெகத், தன்மாய் ஜனா ஆகியோருடன் நடந்து சென்றுகொண்டு இருந்தபோது அவ்வழியாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களும் நடந்து சென்று இருக்கின்றனர்.

மேற்கு வங்க தொழிலாளர்கள்
அப்போது வட மாநில தொழிலாளிகளான சியாமல் கட்டுவாவும் அவரது நண்பர்களும் வழிவிடாமல் சென்றதாக கூறி இந்து முன்னணியை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ், கல்லூரி மாணவர்கள், பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் அவர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

பானிபூரி கடை
அவர்களோடு சேர்த்து அதே பகுதியில் பானிபூரி கடை நடத்தி வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மோனோ, ஷேக் சவான் ஆகியோரையும் இந்து முன்னணியை சேர்ந்த சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கி இருக்கிறார்கள். தகவல் அறிந்த மற்ற வட மாநில தொழிலாளர்களும் கும்பலாக திரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

4 பேர் கைது
இது தொடர்பாக தாக்கப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர் கௌதம் சியாமல், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

வட மாநிலங்களில் வதந்தி
தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் அவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்படுவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலியான வீடியோக்களையும், பழைய வீடியோக்களையும் வட மாநிலத்தவர்கள், அம்மாநில ஊடகங்கள் பரப்பி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை ஆக்சன்
குறிப்பாக பீகார் மாநில பாஜகவின் ட்விட்டர் ஐடி, பாஜக செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டோர் வெளியிட்ட வதந்திகள் காட்டுத் தீ போன்று பரவின. இதனால் பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை மறுத்த தமிழ்நாடு காவல்துறை வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications