வால்பாறை பாலியல் தொல்லை விவகாரம்.. 3 பேராசிரியர்கள் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
கோவை: கோவை மாவட்டம், வால்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கல்லூரிப் பேராசிரியர் ராஜபாண்டி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 2 தற்காலிகப் பேராசிரியர்கள் மற்றும் லேப் டெக்னீஷியனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்லூரி கல்வித் துறை கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்தும் இங்கு வந்து அரசு விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சார்பில் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சார்பாக இந்த கல்லூரியில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது மாணவ, மாணவிகளிடம் உங்களுக்கு சமுதாயத்தில் எதாவது தொந்தரவு உள்ளதா, படிக்கும் இடத்தில் பிரச்னை உள்ளதா என்பது குறித்து கேட்கப்பட்டது.
அப்போது, அக்கல்லூரியில் படித்து வரும் 7 மாணவிகள் அந்தக் குழுவினரிடம் கல்லூியில் பணியாற்றி வரும் 2 தற்காலிகப் பேராசிரியர்கள், ஆய்வுக்கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் ஆகியோர் ஆபாசமாக பேசுவது, செல்போனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக புகார் அளித்தனர்.
இதனால், தங்களால் சரியாக படிக்க முடியவில்லை என்றும், நாங்கள் வெளியூர் என்பதால் இங்கு அரசு விடுதியில் தங்கி தான் படித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழுவினர் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேனி தலைமையில் இது குறித்து வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பொள்ளாச்சி மகளிர் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் அந்த கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேரை கைது செய்துள்ளனர். முரளிராஜ், சதீஷ்குமார், ராஜபாண்டியன் ஆகிய 3 தற்காலிகப் பேராசிரியர்களும், அன்பரசு என்ற ஆய்வக உதவியாளர் என 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், வால்பாறை பாலியல் விவகாரம் குறித்து துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்படவுள்ளது. வேறெங்கேனும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வால்பாறை மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்தவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்லூரிக் கல்வித் துறை கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேராசிரியர் ராஜபாண்டி, தற்காலிகப் பேராசிரியர்கள் சதீஷ், முரளிராஜ் மற்றும் ஆய்வக உதவியாளர் அன்பரசு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பாலியல் புகார் குறித்தான விவகாரத்தை மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications