பரபரப்பில் கோவை.. சந்தேகத்திற்கிடமாக நின்ற 12 கார்கள்.. ஸ்பாட்டுக்கு விரைந்த போலீஸ்! அதிரடி சோதனைகள்
கோவை: கோவையில் சந்தேகத்திற்கிடமாக உரிமை கோரப்படாமல் இருந்த 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் காரில் இருந்தவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காரில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் காரை ஓட்டி வந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறை விசாரணை
இதன்பின்னர் கார் வெடிப்பு தொடர்பான விசாரணையை டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தீவிரப்படுத்தினர். உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவை அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகள்
இதனை பறிமுதல் செய்த போலீசார், முபின் வீடு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கடந்த 22ம்தேதிக்கு முந்தைய நாள் இரவு முபின் வீட்டில் இருந்து 5 பேர் ஒரு பெரிய மூட்டையை தூக்கிச் சென்று காரில் ஏற்றும் காட்சி பதிவாகியிருந்தது. அதில் இருந்தது வெடிபொருட்களா என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முபினுடன் தொடர்பில் இருந்த அவரது கூட்டாளிகள் பற்றிய விசாரணை தீவிரமானது.

என்ஐஏ விசாரணை
அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் 7 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் முபின் காரை எங்கு ஓட்டிச் சென்றார், காரில் சிலிண்டர்கள் எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன, கோயில் அருகே எதேச்சையாக கார் வெடித்து விபத்து நடந்ததா, திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதா என்று அவர்களிடம் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

கார்களில் சோதனை
இதனிடையே கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக கோவை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் சந்தேகத்திற்கிடமாக நின்ற கார்கள் அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வின்சென்ட் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 12 கார்களில், உரிமை கோரப்படாத 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications