45 ஆண்டுகால கோரிக்கை கொங்கு நாடு மாநிலம்- மத்திய அரசுக்கு மனு அனுப்புவோம்: கொ.மு.க. பெஸ்ட் ராமசாமி
கோயம்புத்தூர்: கொங்கு நாடு தனி மாநிலம் என்பது 45 ஆண்டுகால கோரிக்கை. ஆகையால் கொங்கு நாடு தனி மாநிலம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புவோம் என்று கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார்.
கொங்கு நாடு தனி மாநில கோரிக்கை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான தலைவர்கள் கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்த நிலையில் கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொங்கு- முன்னேற்றம் இல்லை
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் இருந்தன. இப்போது 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 34 பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர். ஆனால் கொங்குநாடு பகுதியில் விகிதாச்சார அடிப்படையில் எதுவுமே முன்னேற்றம் இல்லை.

வரி வருவாயில் 66% கொங்கு
66% வரி வருவாய் கொங்குநாட்டின் 11 மாவட்டங்களில் இருந்துதான் தமிழக அரசுக்கு செல்கின்றது. இப்படி வரி வருவாயை பெற்றுக் கொண்டு பகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை. நிர்வாக வசதிக்காக கொங்குநாடு பகுதியை தனி மாநிலமாக பிரித்தால் கூடுதல் வளர்ச்சி ஏற்படும்.

45 ஆண்டுகால கோரிக்கை
1976-ல் இருத்து கொங்கு நாடு தனி மாநில கோரிக்கைக்கான அமைப்பை நடத்தி வருகின்றோம். கொங்குநாடு என்ற பகுதி முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.

ஜாதிய அடிப்படை அல்ல
கொங்குநாடு என்பது கவுண்டர் ஜாதிக்கு மட்டுமானது அல்ல. கொங்கு நாட்டில் வாழும் அனைவருக்குமானது. நாங்கள் கொங்கு நாடு தனிநாடு கேட்கவில்லை... தனி மாநிலம்தான் கேட்கின்றோம். கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு மனு அனுப்புவோம். இவ்வாறு பெஸ்ட் ராமசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications