காத்திருப்புக்குப் பிறகு மழை பெய்தும் விவசாயிகள் சோகம்.. பல்லாயிரக்கான வாழை மரங்கள் முறிஞ்சு போச்சே!
கோவை: வாட்டி வதைத்த கோடை வெயிலுக்கு மத்தியில் லேசாக குளிர வைத்தது மழை. ஆனால் மழையோடு வீசிய சூறாவளிக் காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் கொடுமையில் எந்த ஏரியாவும் தப்பவில்லை. நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், நேற்று கோவை, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. உதகையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் மழை பெய்தது. மழை பெய்யும் முன் கடுமையாக வீசிய சூறாவளி காற்றால், சிறுமுகை லிங்காபுரம், காந்தவயல் ஆகிய பகுதிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
வாழை மரங்கள் அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் கடுமையான சூறாவளிக் காற்றில் சிக்கி, வாழை மரங்கள் தாரோடு முறிந்து வீணானது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலை பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது. இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடன் வாங்கி வாழை பயிர் செய்த நிலையில் பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications