கை காலை கட்டி அறுத்து கொன்னிருக்கான் பாவி.. முடிவு தெரியாம நகர மாட்டோம்.. கொந்தளிக்கும் கோவை
6 வயது குழந்தையை கொன்றவரை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
கோவை: "6 வயசு பெண் குழந்தைங்க.. கை, காலை கட்டி வெச்சி.. கத்தியால் அறுத்திருக்காங்க.. இதுக்கு ஒரு முடிவு தெரியாம, கொன்னவனை கைது செய்யாம எப்படிங்க பிணத்தை வாங்கிட்டு போவோம்" என்று கோவையில் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த தம்பதி சதீஷ் - வனிதா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்திருக்கிறாள்.
வழக்கம்போல், குழந்தை நேற்று முன்தினம் ஸ்கூலுக்கு கிளம்பி போனாள். ஆனால் சாயங்காலம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் தந்தார்கள். மேலும் சொந்தக்காரர்களுடன் சேர்ந்து எல்லா பக்கமும் தேடி அலைந்தார்கள்.
"திருமாவளவன் கட்சி எல்லாம் ஒரு கட்சியா? அது நாட்டுக்கு தேவையா?" போட்டு தாக்கிய ராமதாஸ்
பள்ளத்தில் கிடந்தாள்
பிறகு நேற்று விடிகாலை 4 மணி அளவில் கஸ்தூரிநாயக்கன் புதூர் என்கிற இடத்தில் கத்தியால் அறுபட்ட காயங்களோடு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி ஒரு பள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். குழந்தையை கட்டிக் கொண்டு கதறி அழுதது குடும்பம்.
பாலியல் வன்கொடுமை
இது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கினர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டது. பிறகு மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, இறுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது உறுதியானது.
சிக்னலில் போராட்டம்
இதையடுத்து, கொலை பிரிவு மற்றும் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விஜயகுமார் என்பவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும்வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என்று சொல்லி, உறவினர்கள் துடியலூர் சிக்னலில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆறுக்குட்டி
இதற்கிடையே கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, வரும் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் குழந்தையை பறிகொடுத்து கதறி வரும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்
ஆனால் அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று மாதர் சங்கத்தினர் குரல் எழுப்பி உள்ளனர். அத்துடன், உறவினர்களுடன் சேர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.