ஏம்மா இப்டி பண்ணுன? தாயின் 2வது திருமணத்தால் பள்ளி மாணவி எடுத்த பகீர் முடிவு!
தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் மனதளவில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: அம்மாவின் இரண்டாவது திருமணத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியின் பெயர் பிரியதர்ஷினி என்பதாகும். இவர் கோவை வடவள்ளி அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பூபதி மற்றும் கனகவள்ளி ஆகியோரின் மகளாவார். 8வது படித்து வந்த மாணவி தனது தாயாருடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தாயார் உடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதே தற்கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. பிரியதரிஷினியின் அம்மா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது முதல் கணவரை பிரிந்து வந்து விட்டார். இரண்டவதாக அந்தோணி சாமுவேல் என்பவரை திருமணம் செய்து கொண்டது பிரியதர்ஷினிக்கு பிடிக்கவில்லை.
கடந்த பல ஆண்டு காலமாகவே அவர் தனது தாயிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இதனாலேயே தாய், மகள் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக சண்டை வரவே, னகவள்ளி நான் எங்கேயாவது செல்கிறேன் என கூறி விட்டு மகளிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.
தனது அம்மா தன்னிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்றதால் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது அம்மாவிற்கு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், நான் போகிறேன், நான் போகிறேன் என அடிக்கடி கூறுகிறாய், நீ போக வேண்டாம், நானே செல்கிறேன் என அந்த கடிதத்தில் உருக்கமாக கூறி இருந்தார்.
தற்கொலை செய்து கொண்ட பிரியதர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியதர்ஷினி எழுதி வைத்திருந்த கடிதத்தை வடவள்ளி போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மொபைல் போனில் விளையாடிக்கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி ஹரிணி என்பவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் மூலமாக பாடம் படிப்பதற்காக தனது மகள் ஹரிணிக்கு அவரது அப்பா சுதாகர், செல்போன் வாங்கி கொடுத்து இருந்தார். தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடந்து வருகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் ஹரிணி பாடங்களை படிக்காமல் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ஹரிணி, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்கொலை எண்ணம் வருவதை தடுக்கும் வகையில் மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.