நெகிழ்ந்த கோவை.. ‛ஆட்டிசம்’ பாதிப்பு மகனுக்காக தந்தை எடுத்த ரிஸ்க்! பிரியாணி போட்டியில் மெகா பரிசு
கோவை: ஆட்டிசம் பாதித்த மகனை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக கோவையில் நடந்த பிரியாணி சாப்பிடும் போட்டியில் கண்ணீருடன் பங்கேற்ற கால் டாக்சி டிரைவர் 2ம் இடம் பிடித்தார். அவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
நடிகர் விஷ்ணு விஷால், சூரி நடித்த ‛வெண்ணிலா கபடி குழு' படத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதில் ஹோட்டல் ஒன்றில் பரோட்டா சாப்பிடும் பந்தயம் நடக்கும். அதில் ஒரு ஆள் 50 பரோட்டா சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் ஹோட்டல் சார்பில் ரூ.100 வழங்கப்படும். சாப்பிட்ட பரோட்டாவுக்கு காசு கொடுக்க வேண்டாம்.

அதேவேளையில் 50 பரோட்டா சாப்பிடவில்லை என்றால் பந்தயத்தில் பங்கேற்றவர் பந்தய காசாக ரூ.100 வழங்குவதோடு மட்டுமின்றி சாப்பிட்ட பரோட்டாவுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என விதி இருக்கும். அதில் நடிகர் சூரி பங்கேற்று பரோட்டாவை சாப்பிட்டு ஹோட்டல்காரர்களை அதிர வைப்பார்.
அந்த வகையில் கோவையில் பிரியாணி சாப்பிடும்போட்டி இன்று நடந்தது. அரை மணி நேரத்தில், ஆறு சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என கோவை தனியார் ஹோட்டல் நிர்வாகம் அறிவித்தது. கோவை ரயில்நிலையம் முன்பு ரயில் பெட்டி வடிவத்தில் கேரளாவை சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் என்பவர்தான் இந்த ஹோட்டலை தொடங்கி உள்ளார்.
ஹோட்டலை பிரபலப்படுத்தும் வகையில் இந்த போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 2வது பரிசாக ரூ.50,000, 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 3வது பரிசாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்று போட்டி நடந்தது.

இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கோவை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கணேச மூர்த்தி என்பவரும் பங்கேற்றார். இவர் தனது மகனின் மருத்துவ செலவுக்காக இந்த போட்டியில் பங்கேற்றார். இவர் பிரியாணி சாப்பிடும்போது கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர், ‛‛நான் கால்டாக்சி டிரைவராக இருக்கிறேன். என் பையனுக்காக இந்த போட்டியில் பங்கேற்றுள்ளேன். என் மகனுக்கு 15 வயது ஆகிறது. அவன் ஆட்டிசம் குழந்தையாக இருக்கிறான். அவனை வீட்டில் வைத்து பார்க்க முடியவில்லை.
பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் ரூ.19 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறினார்கள். இதற்காக தான் நான் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளேன். என் மகன் என் வீட்டில் படுக்காமல் அடுத்தவர் வீட்டில் போய் படுக்கிறான். கை கால் எல்லாம் நல்லா இருக்கிறது. அவனுக்கான வேலையை அவனால் செய்ய முடியாது. நானும், எனது மனைவியும் தான் அவனை கவனித்து வருகிறோம். என் மனைவி அதிகம் கஷ்டப்படுகிறார். என் மனைவி மடத்துக்கு பள்ளியில் ஆயாவாக வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் 7 ம் வகுப்பு படிக்கிறார். நாங்கள் வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். எங்கள் மகனுக்கு யாராவது உதவி செய்ய வேண்டும்'' என்று கண்கலங்கினார்.
இந்நிலையில் தான் போட்டியின் முடிவில் 4 பிரியாணி சாப்பிட்ட கணேச மூர்த்தி 2ம் இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கிடையே கணேசமூர்த்தி கண்கலங்கியபடி ஆட்டிசம் பாதித்த மகனுக்காக போட்டியில் திக்கி திணறி கண்ணீர் மல்க பிரியாணி சாப்பிடுவதும், அதன்பிறகு மகிழ்ச்சியாக ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையை வாங்கும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications