கோவை பேராசிரியர் செய்த அசிங்கம்.. தோழிக்கு லொக்கேஷன் அனுப்பி.. போலீஸில் சிக்கவைத்த இளம்பெண்
கோவை: கோவை மாவட்டத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியரை தோழிக்கு தனது செல்போன் மூலம் லொக்கேஷனை அனுப்பி போலீஸில் சிக்கவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கல்லூரிப் பேராசிரியரை காவல் துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள், பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல், மிரட்டல் போன்றவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளிக்கூடம், கல்லூரி, டியூசன், பயிற்சி மையங்கள், வீடு, பேருந்து, பொது இடங்கள் என அனைத்து இடங்களும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருகின்றன.

சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை எதாவதொரு வகையில் பாலியல் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் நாள்தோறும் எதாவது ஒரு பாலியல் பிரச்னைகளை செய்திகளில் கடந்து கொண்டு வரும் சூழல் தான் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களை வெளியில் அனுப்புவதற்கே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், தான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து கல்விச் சான்றிதழைப் பெற பேராசிரியரின் உதவியை நாடிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். இவர் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார். எம்எஸ்சி பட்டதாரியான இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வேலையில் சேரும்போது நிறுவனத்தினர் கேட்டதையடுத்து அந்தப் பெண் தனது கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் அந்த நிறுவனத்தில் வழங்கியுள்ளார். பின்னர், அந்த வேலையை விட்டு நின்றுள்ளார்.
வேலையை விட்டு நின்ற பின்னர் இளம்பெண்ணின் சான்றிதழ்களை அந்த நிறுவனத்தினர் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தான் கோவையில் கல்லூரியில் படிக்கும் போது தனக்கு வகுப்பு எடுத்த கல்வீரம்பாளையம், முருகன் நகர் நேரு தெருவைச் சேர்ந்த பேராசிரியர் சிவப்பிரகாசம் (45) என்பவரின் உதவியை கோரியுள்ளார்.
தன்னுடைய சான்றிதழ்களை நிறுவனத்திடம் இருந்து வாங்கித் தர உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை சிவப்பிரகாசம் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, உனது சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துள்ளேன். வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறேன். நீ கோவைக்கு வா என்று அழைத்துள்ளார்.
சிவப்பிரகாசம் சொல்வதை நம்பிய இளம்பெண் நேற்று சிவப்பிரகாசம் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் சிவப்பிரகாசம் மட்டுமே இருந்துள்ளார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, பேராசிரியர் சிவப்பிரகாசம் திடீரென இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் அவரது பிடியில் இருந்து தப்பி வீட்டின் குளியலறைக்குள் புகுந்துள்ளார்.
பின்னர், அவசர அவசரமாக தனது செல்போனில் இருந்து தோழி ஒருவரை தொடர்புகொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். பின்னர், தான் இருக்கும் இடத்தின் லொக்கேஷனையும் அவருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, அவரது தோழி உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக போலீசார் வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் லொக்கேஷனை வைத்து மாணவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர், வீட்டுக்குள் சென்று குளியலறையில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். தொடர்ந்து கல்லூரி பேராசிரியர் சிவப்பிரகாசத்தை கைது செய்து, கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications