கோவையில் 40 லட்சம் தங்கம்.. மூளைச்சலவை செய்த மனைவி. ஒரே நாளில் உடைந்த 9 ஆண்டு விஸ்வாசம்
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் உள்ள நகைப்பட்டறையில் 9 ஆண்டுகளாக வேலை செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த நகை தொழிலாளியை மூளைச்சலவை செய்த மனைவியால், கடைசியில் சிறையில் குடும்பத்தோடு கம்பி எண்ணுகிறார். ரூ.40 லட்சம் தங்கம் திருடியதால் சிக்கி உள்ளார்கள்.
நகைப்பட்டறையில் வேலை செய்து வந்தவர் தனது மனைவியின் பேச்சை கேட்டு தவறான வழியில் செயல்பட்டதால் இன்று அவருடன் சேர்ந்து சிறையில் இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் பழனிகுமார் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் பாண்டியராஜன் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி. இவருக்கு 27 வயது ஆகிறது.
பாண்டியராஜன்-உமா மகேஸ்வரி தம்பதி கோவை வடமதுரை வி.எஸ்.கே. நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். 9 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பாண்டியராஜன் வேலை செய்து வந்ததால், நகை பட்டறையை இவரை நம்பிவிட்டுவிட்டு, உரிமையாளர் பழனிகுமார் அடிக்கடி வெளியே செல்வது வழக்கம்.
இந்த நிலையில் பட்டறையில் உள்ள நகையை திருடி வருமாறும், இருவரும் வெளியூர் சென்று அதனை விற்று ஜாலியாக இருக்கலாம் என்றும் தொழிலாளி பாண்டியராஜனிடம் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி கூறினாராம். இதனிடையே மனைவியின் மூளைச்சலவையால் சலனம் அடைந்த பாண்டியராஜன், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி பட்டறையில் யாரும் இல்லாத போது, 800 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை எடுத்துள்ளார். பின்னர் மனைவியை அழைத்துக்கொண்டு பாண்டியராஜன் வெளியூருக்கு எஸ்கேப் ஆகியிருக்கிறார்.
இதனிடையே கடைக்கு வந்து பார்த்த பழனிகுமார், நகைகளை திருடியது பாண்டியராஜன் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.. அவரை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. இதையடுத்து தனது கொள்ளை சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டிருந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜன் உமா மகேஸ்வரி தம்பதியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே தப்பியோடிய பாண்டியராஜன் உமா மகேஸ்வரி தம்பதி தஞ்சாவூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக கோவை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பாண்டியராஜனையும், அவருடைய மனைவி உமாமகேஸ்வரியையும் கைது செய்து, அவரிடம் இருந்த 800 கிராம் தங்கத்தை மீட்டார்கள். இதன் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும். கைதான 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications