கோவையில் பெரும் பரபரப்பு.. சாலையோரம் எரிவாயு குழாய் சீற்றத்துடன் கசிந்து சிதறியது.. அலறி ஓடிய மக்கள்
கோவை : கோவையில் எரிவாயு குழாய் ஆய்வு பணியின் போது திடீரென எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கோவை மாவட்டத்தில், குழாய்களில் இயற்கை எரிவாயு வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் உரிமையை, இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி கோவை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

குழாய் பதிக்கும் பணிகள்
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகள் என பல்வேறு பகுதிகளில் புதிதாக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

பயங்கர சத்தத்துடன் வெடித்தது
இந்நிலையில், கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தது. பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், சில பிரச்னைகளின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டது. இதில் குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

அலறியடித்துக் கொண்டு ஓட்டம்
இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது. எரிவாய் குழாய் கசிவு ஏற்பட்டு வெடிக்கும் பொழுது அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.

மீட்புப் பணிகள்
ஒருவழியாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வேறு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. போலீசார் விரைந்து வந்து அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சமூக ஆர்வலர்கள் வேதனை
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பொக்லைன் இயந்திரத்துடன் ஏன் ஆய்வில் ஈடுபட்டனர் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இம்மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்டதால்தான், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications