நகை சீட்டு, ஏலச்சீட்டு கட்டுறீங்களா!.. எச்சரிக்கையா இருங்க.. பொள்ளாச்சியில் பெண் செய்த பகீர் சம்பவம்
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பெண் ஒருவர் ஏலச்சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி அக்கம்பக்கத்தினரிடம் இரண்டு கோடிக்கு மேல் சீட்டு மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி செய்ததாக கூறப்படும் ஜெயந்தி என்பவரின் வீட்டின் கேட்டை உடைத்து சீட்டு போட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏப்பட்டது.
இந்தியாவில் சேமிக்கும் பழக்கம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. கடுகு டப்பா என்றாலே அதில் கடுகைவிட பணத்தை சேமிக்கும் பழக்கம்தான் பல குடும்பத்தினருக்கும் இருந்தது. சிறுக சிறுக பணத்தை சேமித்து சொத்துகள் வாங்க, திருமணத்துக்கு நகை சேர்க்க, பண்டிகைகளுக்கு செலவு செய்வதற்காக என ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு போடுகின்றனர்.

ஓரிரு ஆண்டுகள் பொதுமக்கள் கட்டும் பணத்தை சரியாக கொடுத்துவிட்டு பின்னர் ஏமாற்றப்படும் சம்பவங்களால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதேபோல, தனியார் நிறுவனங்களின் குறைந்த முதலீடு அதிக வட்டி, இரட்டிப்பு லாபம், மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வருமானம் என்று கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து ஏமாறும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
தபால் நிலையங்கள், வங்கிகளில் ஏராளமான சேமிப்பு வசதிகள் இருந்தாலும், நல்ல வட்டி விகிதம் கொடுக்கப்பட்டாலும் அக்கம்பக்கத்தினரை நம்பி சீட்டு போட்டு பல மக்கள் மோசடிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பெண் ஒருவர் ஏலச்சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி அக்கம்பக்கத்தினரிடம் இரண்டு கோடிக்கு மேல் சீட்டு மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி செய்ததாக கூறப்படும் ஜெயந்தி என்பவரின் வீட்டின் கேட்டை உடைத்து சீட்டு போட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சிபுரம் பிரிவு கணபதி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயந்தி. இவர் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு, பலகார சீட்டு, நகை சீட்டு நடத்தி வந்துள்ளார். இதனை நம்பி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் வாரம் மற்றும் மாதத் தவணையில் பணம் கட்டி உள்ளனர், கடந்த சில மாதங்களாக ஜெயந்தி பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
நீண்ட நாட்களாகியும் பணம் தராமல் இழுத்தடித்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பொதுமக்கள் இந்த மோசடி சம்பவம் குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம் பகுதிகளில் புகார் அளித்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஜெயந்தியும், அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஜெயந்தியின் வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து அவரது தாயாரிடம் பணம் கேட்டு முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஜெயந்தி குடியிருந்து வரும் வீடு தனியார் வங்கியில் கடன் வாங்கி உள்ளதால் தற்போது இந்த வீடு ஜப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஜெயந்தி தங்களிடம் மாதம் மற்றும் வார தவணையாக வாங்கிய தொகை கிட்டத்தட்ட ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும். தலைமறைவாக உள்ள ஜெயந்தியை கைது செய்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications