பீப் பிரியாணி விற்க கூடாது.. வேற எது வேணாலும் விற்கலாம்.. பாஜக நிர்வாகி மிரட்டும் வீடியோ வரைல்
கோவை: கோவை, கணபதி அருகே தள்ளுவண்டிக் கடை நடத்தி வரும் தம்பதியிடம் பீப் பிரியாணி கடை நடத்தக் கூடாது என்று பாஜக நிர்வாகி ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எங்களுடைய வாழ்வாதாரத்துக்காக தொழில் நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அச்சம் தருவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பும், அச்சமும் இல்லாத அளவிற்கு போலீசார் உதவ வேண்டும் என அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.
மாடு மற்றும் பசுக்களை இந்துக்கள் தெய்வங்களாக வழிபடுவதால் அதனை கொல்வதும், இறைச்சிக்காகப் பயன்படுத்துவதும் தவறு என்று வலது சாரி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இதனால், மாட்டிறைச்சி, மாட்டிறைச்சி பிரியாணி தொடர்பான பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏழைகளுக்கு நல்ல சத்தான உணவாகவும், விலை குறைந்த அளவில் இருப்பதாலும் பலரும் மாட்டிறைச்சியை விரும்புகின்றனர்.

இந்நிலையில், பாஜகவினர் மாட்டிறைச்சிக்கு எதிராக தொடர்ந்து பிரச்னைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், தள்ளுவண்டிக் கடையில் பீப் பிரியாணி கடை நடத்தி வரும் தம்பதியிடம் பீப் பிரியாணி விற்கக் கூடாது. வேறு எது வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறி பாஜக நிர்வாகி ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், கணபதியை அடுத்த உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி, ஆபிதா. இவர்கள் தள்ளுவண்டி கடையில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனை செய்து வருகின்றனர். ஆபிதாவை காதல் திருமணம் செய்து கொண்ட ரவி இஸ்லாமியராக மதம் மாறியுள்ளார். இந்நிலையில், ஆபிதாவும், ரவியும் எதாவது தொழில் செய்யலாம் என்று யோசித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்களுக்கு தெரிந்த பீப் பிரியாணி செய்யும் தொழிலை தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மாநகர் மாவட்ட செயலாளர் (பாஜக ஓ.பி.சி. அணி) சுப்பிரமணி இந்தப் பகுதியில் மாட்டு இறைச்சி பிரியாணி விற்க வேண்டாம் என தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. பாஜக நிர்வாகி சுப்பிரமணி, ரவி ஆபிதா தம்பதியை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், மாட்டிறைச்சியை தவிர்த்து வேறு எது வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால், இங்கு மாட்டிறைச்சி விற்கக் கூடாது. யாரைக் கேட்டு விற்பனை செய்து வருகிறீர்கள் என வாக்குவாதம் செய்வது பதிவாகியுள்ளது. அதற்கு கடைக்காரர் அருகில் இருக்கக்கூடிய மீன் கடைகளை எடுக்கச் சொல்லுங்கள். நாங்களும் எடுக்கிறோம் என விவாதம் செய்வதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், துடியலூர் போலீசார் இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணையை மேற்கொண்டனர். அங்கிருந்த கடைகள் அனைத்தையும் அந்தப் பகுதியில் இருந்து 200 முதல் 300 மீட்டர் தள்ளி வைக்க போலீசார் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆபிதாவும் ரவியும் கடையை புதிதாக வேறு ஒரு இடத்தில் வைத்து விற்பனை தொடங்கி உள்ளனர்.
இருப்பினும், கடை நடத்துவதற்கு மிகுந்த அச்சமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்வாதாரத்திற்காக 50 ஆயிரம் வரை கடன் வாங்கி எங்களுக்கு தெரிந்த தொழிலை தொடங்கியுள்ளோம். தொழில் செய்யவிடாமல் யாரும் தடுக்க வேண்டாம். முறையான அனுமதி வாங்கித்தான் கடை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications