“அண்ணாமலை வன்முறையை தூண்டுகிறார்”.. ‘ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி பியூஸ் மனுஷ் புகார்!
கோவை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றும், அவரை ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் புகார் அளித்துள்ளார்.
சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான பியூஸ் மனுஷ், நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு அளித்துள்ளார். தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த அண்ணாமலை முயல்கிறார், அவரை கைது செய்ய வேண்டும் என்று பியூஸ் மனுஷ் கோவை
காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஸ் மனுஷ், “அண்ணாமலை பொதுவெளியில் தொடர்ந்து வக்கிரமாக பேசி வருகிறார். அவர் மீது சேலம் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது. உச்ச நீதிமன்ற வழக்கில், தமிழ்நாடு காவல்துறை தனக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.
கோவையில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி பாஜவினர் போராட்டம் நடத்தினர். அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வேலூரில் இருந்து பாஜக தொண்டர் ஒருவர் போனில் அழைத்ததாகவும், 2 பேரை வெட்டிக் கொலை செய்ய இருப்பதாவும், கொலை செய்த பின் தனது குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும்படியும் தெரிவித்தாகவும், எழுச்சி வந்துவிட்டது என்றும் கூறினார்.
இதில் என்ன எழுச்சி? இது வன்முறை. தீவிரவாதம். இதன்மூலம், அவர் கோர்ட்டுக்கு யாராவது சரணடையச் சென்றால் கொலை செய்ய வேண்டும் என தூண்டுகிறார். அதேபோல, மத கலவரத்தையும், வன்முறையையும் தனது பேச்சு மூலம் தூண்டி வருகிறார் அண்ணாமலை. அவர் மீது ஊபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்றே கோவை மாநகர போலீசாருக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பி இருந்தேன். அதற்கு எந்த பதிலும் இல்லாததால் நேரில் வந்து கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications