கோவை மேயர் ராஜினாமா.. அதிமுக கவுன்சிலர் கேட்ட ஒற்றை கேள்வி.. அதிர்ந்த கூட்டம்
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தது ஏன் என்று அதிமுக கவுன்சிலர் கேள்வி எழுப்பினார். அதற்கு உடனே திமுகவினரும் சரமாரியாக பதிலடி கொடுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் கடந்த ஜூலை 3ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் அன்றே வழங்கினார். தனது ராஜினாமா கடிதத்தில் உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார்,

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) கோவை மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடந்தது. இந்த சிறப்பு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்றார். இதேபோல் திமுக, அதிமுக, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கோவை மாநகராட்சியின் சிறப்பு கூட்டத்தில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பது குறித்து பேசு பொருளாக வைக்கப்பட்டது. ஜூலை ஒன்றாம் தேதியிட்ட கடிதத்தில் மேயர் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி இருப்பதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூறினார்.
அதன் பின்னர், மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வது என மாநகராட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே கோவை மாநகராட்சியின் 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்வதற்கு என்ன காரணம் என்ன என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது திமுக கவுன்சிலர்கள் உடனே எழுந்த நின்று, அதிமுகவின் செ.ம.வேலுச்சாமி மேயராக இருந்து ராஜினாமா செய்தபோது விவாதம் நடத்தினீர்களா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதனையடுத்து கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிப்பு வெளியானது. கோவை மாநகராட்சி கூட்டம் துவங்கிய 9 நிமிடத்திலேயே முடிந்துவிட்டது.
கோவை மாநகராட்சியின் சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜினாமா தீர்மானம், கோவை மாவட்ட ஆட்சியர் மூலம் நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளதாம். பின்னர் மாநில தேர்தல் ஆணையம் மேயர் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும் என்கிறார்கள்.
இதனிடையே இன்றைய கூட்டம் குறித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இன்று நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ராஜினாமா தொடர்பாக தீர்மானம் நிறைவேறியுள்ளது. கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார் என பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் நாங்கள் (எதிர்க்கட்சிகள்) கூறியிருக்கிறோம்.
கடந்த இரண்டரை வருடங்களாக ஊழலை தவிர வேறு எதுவுமே கோவையில் நடைபெறவில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல, மேயரை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. மேயர் நேரடியாக ராஜினாமா கடிதம் தராமல் உதவியாளர் மூலம் தந்ததன் மூலம் அந்த பொறுப்பிற்கு உரிய மதிப்பு தெரியாதவராக இருக்கிறார்.
மேயர் கல்பனா ஆனந்தகுமார் செய்த ஊழல் குறித்து சிறப்பு தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மேயர் இல்லாத இந்த நேரத்தில் மாநகராட்சி ஆணையாளர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மேயர் கல்பனா பதவி விலகியதற்கான காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications