நானும் திராவிடர் தாங்க.. அதில் என்ன உங்களுக்கு சந்தேகம்.. ஒரே போடாக போட்ட வானதி சீனிவாசன்!
கோவை: தென்னிந்திய மாநிலங்களில் வாழக் கூடிய அனைவரும் திராவிடர்கள் தான் என்றும், நானும் ஒரு திராவிடர் தான் எனவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடாது என்று கூறிய அவர், வளர்ந்த நாடுகளுடன் தமிழ்நாட்டை ஒப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக அலுவலகத்தில் இன்று எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ-வும் தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் பேசுகையில், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள் இது.

வானதி சீனிவாசன் பேட்டி
1974ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்து இளைஞர்களுக்கு கூறும் வகையில் கண்காட்சி நடத்தப்படுகிறது.
எமர்ஜென்சி
இன்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக, எமர்ஜென்சி காலகட்டத்தில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். எப்போதும் வரலாற்றை மறக்க கூடாது என்பதற்காகவே சொல்கிறோம். காங்கிரஸ் கட்சி இப்போது வரை மன்னிப்பு கேட்கவில்லை. மீண்டும் இதுபோல் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என்ற மக்களின் விழிப்புணர்வுக்காக நடத்துகிறோம்.
திராவிடம் பற்றி வானதி
தொடர்ந்து, அதிமுக - பாஜக கூட்டணியை அறிவித்துவிட்டோம். திராவிடம் என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் இந்த புரிதல் இருந்தால், கன்னடம் மற்றும் மலையாளத்திற்கு எதிராகவோ பிரச்சனை வராது. திராவிடம் என்ற சிந்தனையை இவர்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதே எதார்த்தம்.
நானும் திராவிடர்
திராவிடம் என்பது நிலப்பரப்பு. இங்கு வாழக்கூடிய மக்கள் திராவிடர்கள். நான் திராவிடர் தான். இங்குள்ள அனைவரும் திராவிடர் தான். இந்தியாவின் கல்வித் தரத்தை பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களின் கல்வி கட்டமைப்பு மோசமாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்டவை அடிப்படை கட்டமைப்புகள் நீண்ட காலமாக ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
கல்வி கட்டமைப்பு
இன்று தமிழ்நாட்டை பீகாருடன், ஒடிசாவுடன் ஒப்பிடக் கூடாது. தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. புதியக் கல்விக் கொள்கையை அனைத்து தரப்பினரும் வரவேற்கிறார்கள். பாஜக யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications