தொகுதி மாறுகிறாரா வானதி சீனிவாசன்.. கோவை வடக்குக்கு ஜம்ப்? அவரே கொடுத்த பதில் இதுதான்!
கோவை: கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி மாற இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட, பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கு தொகுதிக்கு மாற இருப்பதாக ஒரு தகவல் பரவை வருகிறது. கடந்த தேர்தலிலேயே 1,728 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் வானதி. அதனால், இந்த முறை பாதுகாப்பாக தொகுதி மாறப்போவதாக தகவல் உலவி வருகிறது.

இந்நிலையில், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மோடி முகாம் நிகழ்வினை, பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களையும், மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.
பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தேர்தல் பணிகளை துவங்கி உள்ளோம். மோடி முகாம் என்ற பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுடன் இணைந்து முகாம் நடத்தப்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. வரும் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுவதால் இந்த தொகுதியில் தற்போது நான் அதிக கவனம் செலுத்துவதாக கூறுவது தவறு. கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும்.
எங்களை பொறுத்தவரை அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும், எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து இடங்களிலும்ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள், முகாம்கள் நடத்தப்படும். இதற்கு முன்பும் கோவை வடக்கு தொகுதியில் மட்டுமல்ல அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் பணிகள் செய்துள்ளோம்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications