கோவை பெண் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்.. 59 வயது முதியவர் கைது
கோவை: கோவையில் பெண் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் தன் மகளின் வாழ்வு பாதிக்கப்பட்டதாக கருதி பெண் முகத்தில் ஆசிட் வீசியதாக 59 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரியை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி ராதா . இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து தனது கணவரை பிரிந்த ராதா 8 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார்.
பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். கடந்த வாரம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராதா அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றார்.

பெண் முகத்தில் ஆசிட் வீச்சு
மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது வீட்டின் அருகே இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் ராதாவின் வலது பக்க முகம், தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணை
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து இளம்பெண் மீது ஆசிட்டை வீசி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். ராதாவின் கணவர், ஆள் வைத்து இதைச் செய்தாரா அல்லது ராதாவிற்கு பழக்கமானவர்கள் யாரேனும் இதைச் செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் எதிர்பாராத திருப்பமாக 59 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிட் வழக்கில் திருப்பம்
ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராதாவின் கணவரான ஸ்டாலினின் நண்பர் ஒருவரது மாமனார் தான் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர். ஸ்டாலினின் நண்பரான சந்திரசேகரனுக்கு திருமணம் ஆன நிலையில் அவர் ராதாவுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் ஸ்டாலினை பிரிந்த ராதா தனியே கோவை அம்மன் குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இருந்தும் அவர் சந்திரசேகரிடம் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. கணவரின் நடவடிக்கைகள் குறித்து சந்திரசேகரனின் மனைவி தனது தந்தையான இளங்கோவன் என்பவரிடம் கூறியுள்ளார்.

கள்ளக்காதல் சந்தேகம்
ராதாவுடன் சந்திரசேகர் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதாக சந்தேகப்பட்ட இளங்கோவன் ராதா தான் தனது மகளின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக கருதி பழிவாங்க நினைத்துள்ளார். இந்த நிலையில்தான் கடைக்குச் சென்று ஆசிட் வாங்கிய இளங்கோவன் ராதாவை பின்தொடர்ந்து வந்து உள்ளார் அப்போது கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ராதா மீது இளங்கோவன் ஆசிட்டை வீசியதாக தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பிறகு இளங்கோவனை கைது செய்துள்ள ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications