கோவையில் தங்க நகை பறிக்க பெண்ணின் அருகில் போன திருடன்.. கடைசியில் நினைத்து பார்க்க முடியாத ட்விஸ்ட்
கோவை: கோவை சவுரிப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வீட்டு பணிப்பெண்ணிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவ்வளவு ரிஸ்க் எடுத்து நகையை பறிக்க பக்கத்தில் சென்று பார்த்த பின்னர் தான் தெரிந்துள்ளது அது நகை அல்ல வெறும் மஞ்சள் கயிறு என்று.. இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், தங்க நகை அணியாத பெண்ணை தாக்கிவிட்டு தப்பினார். கடைசியில் சிசிடிவி காட்சியால் சிக்கியுள்ளார்.
இன்றைக்கு சில இளைஞர்கள் சீக்கிரமாக பணக்காரர்களாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக வழிபறி செய்யவும், திருடவும் தயங்குவது இல்லை.. சிக்கினால் சிறை,சிக்காவிட்டால் சொகுசு வாழ்க்கை என்று தவறான பாதையில் போகிறார்கள். அவர்கள் அதற்காக திட்டமிட்டு திருடுகிறார்கள். வீட்டில் ஓனர் பூட்டி விட்டு செல்லும் நேரத்தை சரியாக கவனித்து அந்தநேரம் பார்த்து வீடு புகுந்து நகை பணத்தை திருடி செல்கிறார்கள்.

அதேநேரம் மோட்டார் சைக்கிளில் ரோந்து செல்லும் திருடர்கள், தங்க நகை அணிந்து செல்லும் வயதான பெண், நடுத்தர பெண்களை குறிவைத்து வழிபறி செய்கிறார்கள். அடிக்கடி இப்படி நடக்கிறது. இவர்கள் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் அடிக்கடி வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். நேற்று கோவையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கோவை சவுரிபாளையத்தில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார் 50 வயது பெண் ஒருவர். நேற்று காலை 9.30 மணியளவில் சவுரிபாளையத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார் , பெண் கழுத்தில் மஞ்சள் தாலி கயிறு மட்டும் அணிந்திருப்பது பக்கத்தில் போன பின்னர் தான் தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.. அந்த பெண் நடந்த சம்பவத்தை அப்பகுதி மக்களிடம் கூறியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து அப்பகுதியினர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் கோவை வடக்கு காவல் ஆணையர் ஆர்.ஸ்டாலினுக்கு தெரியவந்தது. அவர் குற்றவாளியை உடனடியாக கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து, பெண்ணை தாக்கியவர் எங்கு சென்றார் என்பதை தேடினார்கள். அவர் சிங்காநல்லூரை சேர்ந்த அசோக்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது. அவரை அதிரடியாக கைது செய்தனர். செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இளைஞர், மஞ்சள் கயிறை பறிக்க முயன்று, கடைசியில் கம்பி எண்ணி வருகிறார்.












Click it and Unblock the Notifications