எங்க கிட்ட அதிகாரம் இருந்தால்.. ஒரே மாசத்துல இதை செய்வோம்.. கோவையில் சவால் விட்ட அண்புமணி
கோவை: எங்களிடம் அதிகாரம் இருந்தால் ஒரு மாதத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்துவோம். காவல் துறைக்குத் தெரியாமல் இந்த விஷயங்கள் நடைபெறுவதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கையில் நல்லதும் உள்ளது, மாநிலத்திற்கு பாதகமும் உள்ளது. உதாரணமாக மும்மொழிக் கொள்கையை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டிற்கு தேவையானது இருமொழிக் கொள்கை.

மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம், கொள்கை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது. இந்திரா காந்தி எமர்ஜென்சி காலகட்டத்தில் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றதால் தான் இப்பிரச்னையே வந்தது. கல்வி என்பது மீண்டும் மாநில பட்டியலில் வரவேண்டும். அப்படி வந்தால் ஒவ்வொரு மாநிலமும் அதற்கான கொள்கையின் அடிப்படையில் முடிவெடுப்பார்கள்.
மத்திய அரசு கல்விக் கொள்கையை திணிக்க கூடாது, ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதியை தர மாட்டோம் என கூறக் கூடாது. திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் போதைப் பொருட்கள் சுமார் ஐந்து மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. இதுகுறித்து முதல்வரிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளேன். ஆனால், அவர் ஏதோ பெயருக்கென ஒரு கூட்டத்தைக் கூட்டி எதையோ படித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறிவிடுகிறார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. இரண்டு தலைமுறையினரை இதற்கு அடிமையாக்கி நாசம் ஆக்கிவிட்டனர். அடுத்த தலைமுறையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். ஒரே நாளில் அதிக கொலைகள் நடப்பதற்கு காரணம் போதைப் பொருட்கள்தான். முதலமைச்சர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களிடம் அதிகாரம் இருந்தால் ஒரு மாதத்தில் இதனை கட்டுப்படுத்த முடியும். பத்து அல்லது ஐந்து காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் போதும். அப்போதுதான் பயம் வரும். காவல்துறைக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. இந்தியாவிலேயே அதிக மது கடைகள், அதிக சாலை விபத்துகள், அதிகமான இளம் விதவைகள், அதிக கல்விக் கடன் பிரச்னை, அதிக தற்கொலைகள், அதிக மனநல நோய் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இதற்கெல்லாம் முழு முதல் காரணம் மதுதான்.
தமிழ்நாடு இளைஞர்களால் மது இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்கி இருப்பது தான் திராவிட மாடல். மதுவை விற்பனை செய்யாமல் திணிப்பதாக சாடினார். மது பிரச்னை குறித்து திருமாவளவன் தற்பொழுதாவது ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். திருமாவளவன் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு முதலில் அழைப்பு விடுக்கட்டும் என்று கூறினார்.
மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு என்பது அவசியம். பள்ளியில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியதை இழிவாக கருதுகிறேன். பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை கூறுவது அவசியம். ஆனால், இப்போதுள்ள இளைய சமுதாயத்தினர் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், சொல்கின்ற விதத்தில் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். மேலும், எந்தக் கட்சியினர் மாநாடு நடத்தினாலும் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications