கால்கடுக்க காத்திருந்த மக்கள்.. ஏமாற்றிய அதிகாரிகள்.. திடீர் சாலை மறியல்.. கொதிப்படைந்த கோவை!
கோவை: கோவையில் தடுப்பூசி இல்லை என்று அறிவிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தளர்வில்லாத முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு 36,000- க்கு மேல் சென்ற தினசரி பாதிப்பு இப்போது 25,000-க்குள் அடங்கி இருக்கிறது. உயிரிழப்பும் குறைந்து ஆறுதல் அளிக்கிறது.

தமிழக அரசு அதிவேகம்
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான படுக்கைகள் பற்றாக்குறை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தமிழகத்திலேயே தடுப்பூசிகள், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது .

தடுப்பூசி தட்டுப்பாடு
தமிழகம் முழுவதும் பலர் குறிப்பாக இளைஞர்கள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனால் தமிழகத்தில் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் குறைவான தடுப்பூசிகளே போடப்படுகின்றன. இதனால் தடுப்பூசி கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தமிழகத்திலேயே கொரோனா தொற்று அதிகமுள்ள கோவை மாவட்டத்திலும் தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலிக்கிறது.

ஆர்வமுடன் சென்ற மக்கள்
கோவையில் ஒவ்வொரு தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி பெறுவதற்காக மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுக்கரையை அடுத்த அரிசிபாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் தடுப்பூசி மையத்திற்கு இன்று காலை 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக ஆர்வமுடன் சென்றனர்.

திடீர் சாலை மறியல்
ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக வெறும் 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டது. பல மணி நேரம் காத்திருந்த நிலையில் தடுப்பூசி இல்லை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். இதனை தொடர்ந்து சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அங்கு இருந்த உயர் அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

ஆதங்கம் தெரிவித்தனர்
அந்த பகுதி முழுவதும் பதற்றம் ஏற்படவே போலீசார் உடனடியாக விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். ''ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்த வந்தோம். கால்கடுக்க நின்றபிறகு தடுப்பூசி இல்லை என்று கூறுகின்றனர்'' என்று அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசாரின் வேண்டுகோளை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications