ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தது தேர்தல் விதிமீறலில் வராது.. காரணம் கூறிய கோவை கலெக்டர்
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை மறைத்து வைத்து பணம் வழங்குவது போன்ற வீடியோ வெளியானது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை பணம் வழங்கியது தேர்தல் விதிமீறலில் வராது எனவும் அதற்கான காரணத்தையும் கூறி கோவை கலெக்டர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இதனால் மாநிலம் முழுவதும் பறக்கும் படை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் கோவை லோக்சபா தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. இங்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். மேலும் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்கள் ஒருவரையொருவர் விமர்சித்து வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் தான் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது அண்ணாமலைக்கு பெண் ஒருவர் ஆரத்தி எடுக்கிறார். அதன்பிறகு அண்ணாமலை அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்கிறார். இந்த பணத்தை வெளிப்படையாக கொடுக்காமல் ஆரத்தி தட்டிற்கு கீழே மறைத்து கொடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது அண்ணாமலை கோவையில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவர் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் வழங்கியதாக கூறப்பட்டது.

பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தாலே ஆரத்தி எடுக்கும் பெண்கள் உள்பட பிரசாரத்துக்கு செல்வோருக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் அண்ணாமலை வீடியோ விவாதத்தை கிளப்பியது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்க தொடங்கினர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரான கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கவனத்துக்கு சென்றது.
இதையடுத்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை நடந்து முடிந்தது. இதுதொடர்பாக கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி எக்ஸ் பக்கத்தில், ‛‛போலீஸ் விசாரணையின் அடிப்படையில் இந்த வீடியோ 2023 ஜூலை மாதம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இது தேர்தல் விதிமீறலின் கீழ் வராது. இந்த தவறான விஷயத்தை பரப்பியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் போலீசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications