Annamalai: கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் திமுக செய்த தவறு – அண்ணாமலை அடுக்கடுக்காக புகார்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் [Annamalai].
கோவை காளப்பட்டி பகுதியில் பாஜக சார்பில் 'நாளை நமதே தமிழ்நாடும் நமதே' என்கிற பெயரில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக எம்பி தயாநிதி மாறன், கோவை மக்களை தரக்குறைவாக பேசியுள்ளார். 2021 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதுகூட கோவை மக்கள் திமுகவினரை ஏற்கவில்லை. இந்தமுறை தமிழகம் முழுவதும் திமுக வேண்டாம் என்கிற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர்.

கோவை மெட்ரோ ரயில் விவகாரம்
கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று அதிமுக, பாஜக கட்சிகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். எல்லா மெட்ரோ ரயில் திட்டங்களும் கடன் வாங்கித்தான் செய்கின்றோம். சென்னை மெட்ரோவும் கடன் வாங்கி செயல்படுத்துகிறோம். கோவை மெட்ரோ ரயில் சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவுக்கு திட்டமிடப்பட்டது. இதில் 70 சதவீதம் கடன் வாங்கித்தான் செய்ய வேண்டும்.
மத்திய அரசுக்கு தவறான திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்பியுள்ளனர். அதை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 20 சதவீத பயண செலவு ஆண்டு தோறும் கூட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அதை மாற்றி கொடுங்கள் என்று மத்திய அரசு கேட்கிறது. கோவை மாநகராட்சியில் மட்டுமே 22 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். மத்திய அரசிடம் திமுக பழைய தரவுகளை கொடுத்துள்ளனர். தற்போதுவரை புதிய தரவுகளை கொடுக்கவில்லை.
தமிழ்நாடு அரசு கடன்
மத்திய அரசு கேட்டதை மாநில திரும்ப கொடுக்க வேண்டும். இதையெல்லாம் திமுகவினர் சொல்ல மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். 2021 ஆட்சியில் இருந்து அதிமுக வெளியே வந்த போது, 4 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் இருந்தது ஆனால் இன்று திமுக ஆட்சியில் 6 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்த கடன் முழுதும் பொது மக்கள் மீதுதான் உள்ளது.
2023 வருடத்தில் இருந்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களை மாநில அரசு வெளியிடுவதில்லை. முதல்வர் தரவுகளை கொடுக்காமல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைத்துள்ளது என சொல்கிறார். மேற்கு மண்டலத்தில் கடந்த 2 வருடங்களில் வங்கதேசத்தைச் சேர்ந்த 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததற்காக கைது செய்துள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications