கோவையில் ஐஐஎம் கொண்டு வருவேன்: 100 வாக்குறுதிகளை வெளியிட்ட அண்ணாமலை! 500 நாளில் நிறைவேற்றுவதாக உறுதி
கோவை: கோவை லோக்சபா தொகுதிக்கு 100 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் பாஜக வேட்பாளர் அண்ணாமலை.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

தமிழ்நாட்டில் இந்த லோக்சபா தொகுதியில் அனைவராலும் உற்று கவனிக்கப்படும் தொகுதிகளில் முக்கியமானது கோவை. கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
கோவை லோக்சபா தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கும் வகையில் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதிகளை அளித்துள்ள அண்ணாமலை, இந்த 100 வாக்குறுதிகளும் தான் லோக்சபா எம்.பி ஆன அடுத்த 500 நாட்களில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை அளித்துள்ள வாக்குறுதிகளில் சில:
1. கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை
2. பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
3. கோவை சரவணம்பட்டியில், மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4. கோவையில் ஐஐஎம் கொண்டுவர வலியுறுத்துவோம்.
5. கோவையில் இருந்து ஆன்மிக தளங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.
6. கோவை தொகுதியில் 250 மக்கள் மருந்தகம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.
7. கோவை விமான நிலையம் சர்வதேச விமான முனையமாக மாற்றப்படும்.
8. காமராஜர் பெயரில் மூன்று உணவு வங்கிகள் (Food bank) அமைக்கப்படும்.
9. கோவை தொகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அமைக்கப்படும்.
10. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை
11.கோவை தொகுதியில் நான்கு நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும்.
12. கோவையிலிருந்து ஆன்மீக தலங்களுக்கு 10 ரயில்கள் இயக்கப்படும்.
13. கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்தனி அலுவலகங்கள் திறக்கப்படும்.
14. ஆனைமலையாறு - நல்லாறு அணை கொண்டு வருவோம்.
என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications