கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிடவுள்ளது. நாம் தமிழர், அதிமுக, திமுக கட்சிகளை தொடர்ந்து தவெக இன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. உள்கட்சி பிரச்சனை காரணமாக பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்தார். அண்ணாமலை கோவையில் இருந்தாலும் அப்செட் காரணமாக பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்லாமல் புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி பாலக்காடு சென்றார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் மோடிக்கு பாஜகவினர் வரவேற்பளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை
மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் கோவை விமான நிலையம் சென்று பிரதமர் மோடியை வரவேற்றனர். ஆனால் அண்ணாமலை கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்பதற்கு விமான நிலையம் வரவில்லை.
மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு, அண்ணாமலைக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதால் அவர் அப்செட்டில் உள்ளார். ஏற்கனவே தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார். கோவையில் சிங்கால்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.
அண்ணாமலை ஆப்சன்ட்
அவர் எதிர்பார்த்த 2 தொகுதிகளும் பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜகவுக்கு அதிமுக வழங்கியுள்ளது. அதிலும் வானதி சீனிவாசன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அண்ணாமலையும் கோவை வடக்கு தொகுதிக்கு முயற்சி செய்த நிலையில் அதற்கும் தலைமை பாசிட்டிவான பதிலை கொடுக்கவில்லை. இதனால் அவர் தேர்தலில் போட்டியில்லை என்று சொல்லி விலகிவிட்டார்.
கட்சிப் பணிகளிலும் கலந்து கொள்வதில்லை. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியையும் அண்ணாமலை புறக்கணித்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜக ஒரு தேசிய கட்சி. பியூஸ் கோயல் நாளை தான் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருகிறார். அதன் பிறகு மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தி, டெல்லி சென்று தான் வேட்பாளர் அறிவிப்பு இருக்கும்
லிஸ்டில் இருந்தும் வரவில்லை
அண்ணாமலை எங்கள் அன்புக்குரிய தம்பி. இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பாக அவருக்கு கொடுக்கவில்லை, இவருக்கு கொடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. வரவேற்பு பெயர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் இருந்தது. அவர் தான் வரவில்லை என்கிறார்கள். நான் வந்தவுடன் அண்ணாமலை எப்போது வருவார் என்று தான் கேட்டேன். நான் என்னவென்று கேட்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications