பாஜக மீது கை வைத்தால்... திமுகவுக்கு வட்டியும், முதலுமாக திருப்பிக் கொடுப்போம் -அண்ணாமலை
கோவை: பாஜக மீது கை வைத்தால் திமுகவுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
உத்தரகாண்ட் பெருவெள்ளம் : மீட்புப்பணிகள் நீடிப்பு மலையேற்ற வீரர்கள் 8 பேர் உள்பட 11 உடல்கள் மீட்பு
மேலும், திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற தொடங்கிவிட்டதாக பல செய்திகள் வெளிவரத் தொடங்கியும் முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வினவியுள்ளார்.
ஷிப்ட் முறை
ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதியில் பணியாற்றக் கூடிய ஊழியர்களை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஷிப்ட் போட்டு தனது வீட்டில் வேலை வாங்கி வருவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். ஆட்சி அமைத்து 5 மாதங்களிலேயே திமுக அமைச்சர்கள் இது போன்று செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், நிலக்கரி தொடர்பாக பேசுவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எந்த உரிமையும் கிடையாது என அண்ணாமலை சீறியுள்ளார்.
கமிஷன் பெற
மின்சாரத்தை ரூ.20-க்கு வாங்கவில்லை என கதை சொல்லி வருவதாகவும் மின் துறை அமைச்சருக்கு கமிஷன் வாங்குவதற்காகவே தமிழக மின்சார வாரியம் செயல்பட்டு வருவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடே இல்லாத போது தட்டுப்பாடு என்ற பெயரில் பஞ்சப்பாட்டு பாடப்படுவதாகவும் தனி ஒரு குடும்பத்தின் வளத்திற்காக நேர்மையான அதிகாரிகள் ஊழல்வாதிகளாக மாற்றப்படுவதாக சாடினார்.
தொகுதியில் அரசியல்
ஊழலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம் என பிரதமர் மோடி கூறியிருப்பது, தமிழக அரசுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளா அண்ணாமலை, அமைச்சர் சேகர்பாபுவின் பேட்டியை தாம் பார்த்ததாகவும் முடிந்தால் பாஜகவை தொட்டுப் பார்க்கட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார். பாஜக 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது என்பதை ஒரு தொகுதிக்குள் அரசியல் செய்து வரும் சேகர்பாபு உணர்ந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
விழித்துக் கொள்க
தமிழக முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்கள் தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை சரியாக இனி பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். பாஜகவுக்கு எதிராக அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், செந்தில்பாலாஜி, சேகர்பாபு ஆகிய மூவர் மட்டுமே இதுவரை பேட்டிகள் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.