2024 லோக்சபா தேர்தலுக்கு அப்பறம்.. நாம் தமிழர் கட்சின்னு ஒன்னு இருக்கவே இருக்காது.. அண்ணாமலை தாக்கு
கோவை: 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியே இருக்காது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 2024 இல் தமிழகத்தில் ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவர் போட்டியிட்டால் திமுகவோ கூட்டணி கட்சியினரோ எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடையச் செய்வோம் என்கிறார்கள்.

வடஇந்தியாவில் ஒரு தொகுதி , தென்னிந்தியாவில் ஒரு தொகுதி என பிரதமர் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாஜகவினர் கருதுகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சீமானோ, பிரதமர் தமிழகத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என சீமான் கூறியிருந்தார்.
இதனால் பாஜக அண்ணாமலைக்கும் சீமானுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் என்னை எதிர்த்து பாஜக தனித்து போட்டியிட்டு ஒரு வாக்கு அதிகமாக பெற முடியுமா என்றும் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு நாம் தமிழர் என்ற ஒரு கட்சியே இருக்காது. அத்துடன் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை விட, அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இந்தியாவிலேயே மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியை பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.
மும்பை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அதை மறைத்து பேசியது கண்டனத்துக்குரியது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு தமிழகத்தில் அதிமுக மற்றும் தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது வரவேற்புக்குரியது. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான தலைவர்கள் தான் இந்தியா கூட்டணியில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வளர்ச்சியை இது அதிகப்படுத்தும். இதனை எதிர்ப்பவர்கள் சுயநலவாதிகள். குடும்ப அரசியலை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள். சீமானின் சவாலுக்கு பாஜக தயாராக உள்ளது. ஒரு சதவீதம் என்ன 30 சதவீதம் வாக்குகளை கூடுதலாக வாங்குகிறோம். சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. அவரை யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லை என்பதுதான் காரணம்.
சிலிண்டருக்கு ரூ 100 மானியம் தரப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. விஸ்வகர்மா திட்டத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications