பரபரக்கும் டெல்லி விசிட்.. கூட்டணி குறித்து பேசியது இதுதான்.. அண்ணாமலை ஓபன்!
கோவை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்தார். அதைத்தொடர்ந்து, தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று வந்த நிலையில், மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி மலருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கூட்டணி குறித்து டெல்லியில் பேசியது குறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 ஆவது ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் இந்த ரயில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட வழித்தடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும். கோயம்புத்தூர் - கரூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை அதிகம் விபத்து நடக்கும் பகுதியாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் ஆதரவுடன் முதன்மை பெறவில்லை. 27 சதவீதம் மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளார். எங்களுடைய கள ஆய்வும் கூட அதைதான் சொல்கிறது. தமிழகத்தில் எல்லா மக்களும் ஒரே விதமாக ஓட்டு போடுவதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி, தென் தமிழகத்தின் சூழல், மதுரை வட்டார தொகுதிகள் ஒரு மாதிரியாகவும், கொங்கு பகுதி தொகுதிகள் ஒரு மாதிரியாகவும் இருக்கும். இது பற்றியெல்லாம் டெல்லியில் பேசி இருக்கின்றோம். தமிழகத்தில் ஐந்து மண்டலத்தில் மூன்று மண்டலங்களில் ஜெயிக்க வேண்டும். மூன்று மண்டலங்களில் ஜெயிக்காமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது.
கட்சியின் தலைவராக, தொண்டராக என மைக்ரோ லெவலில் அனைத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது. ஜாதிகள் வேண்டாம் என்று நினைக்கிறோம். ஆனால் ஜாதிகள் வாக்கு செலுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெல்லியில் என்ன பேசினேன் என்பதை சொன்னால் தவறாக போய்விடும். தமிழகம் எப்படி இருக்கிறது, தமிழக மக்களின் நலன், எப்படி இருக்க வேண்டும் என பேசி இருக்கிறோம்.
கூட்டணி குறித்து பேச விரும்பவில்லை. டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் உள்துறை அமைச்சர் அவர்கள் பேசியிருந்தார் என்னை பொறுத்தவரை அதை இறுதி கருத்தாக பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தலைவர் மீதோ கட்சியின் மீதோ கோபம் கிடையாது. பாஜக மற்றும் தமிழக நலன் ஆகியவைதான் எனக்கு முக்கியம். தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லி இருக்கிறேன். அதன் பொருளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் பார்ப்பீர்கள். எங்கள் கட்சியின் தலைவர்கள் சரியான முடிவு எடுப்பார்கள். அவர்களிடம் சொல்ல வேண்டியதை நான் சொல்லி வந்திருக்கிறேன். பிரதமர் ஆறாம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். அரசு விழாவில் பங்கேற்று மதுரை வழியாக திரும்புகிறார். தேர்தலுக்குப் பிறகு பிரதமர் தமிழகத்திற்கு வரும் முதல் விசிட் அது. அரசியலில் என்ன நடக்க வேண்டுமோ அது சரியான நேரத்தில் நடக்கும்.
வருங்காலத்தில் என்னை பார்ப்பீர்கள். எனது வெறியும், பசியும், நெருப்பும் உள்ளே எரிந்து கொண்டிருக்கிறது. எதையும் மாற்றி பேசுபவன் அண்ணாமலை கிடையாது. எனக்கு பாஜக முதன்மையானது. பாரதிய ஜனதா கட்சியின் எல்லா முடிவுகளும் தொலைநோக்கு பார்வையுடன் இருக்கும். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. நான் மாறி மாறி பேசுபவன் கிடையாது. என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாஜகவின் வளர்ச்சி தான் எனக்கு முக்கியம்.
வருங்காலத்தில் என்னுடைய நிலை எப்பொழுதுமே தொடர்ச்சியாக இருக்கும். கருத்துக்களை கருத்துக்களாக வைத்திருக்கிறேன். அது விஜயாக இருந்தாலும் சரி, முதல்வர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி. ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் மாநிலத்தின் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் எந்தவித தவறும் இல்லை. செங்கோட்டையன் பயணத்தில் யூகத்தை எழுதுகின்றீர்கள். பாஜகவை பொருத்தவரை யாரையும் மறைமுகமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
யூகங்களுக்கு எல்லாம் நான் பேசுவது தவறாக போய்விடும். விஜய் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விஜய்க்கும் பாஜகவுக்கும் எந்த உடன்படிக்கையும் இல்லை. செங்கோட்டையன் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. மாநில அரசு பாதுகாப்பு கொடுக்க தவறும் பொழுது மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்கிறது. பாதுகாப்பு கொடுப்பதில் விருப்பு வெறுப்பு பார்பபதில்லை. மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்தால் அதைத் தவறாக நான் சொல்ல மாட்டேன்.
விஜய் என்றாலும் சரி, செங்கோட்டையன் என்றாலும் சரி எல்லார்க்கும் ஒன்றுதான். எங்களுக்கும் விஜய்க்கும், செங்கோட்டையனுக்கும் எந்த உறவும் கிடையாது.
பாரதி ஜனதா கட்சியில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்கவில்லை. விஜய் கட்சியில் விஜய் வேட்பாளர். திமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர். பாரதிய ஜனதா கட்சி யாரையும் முதல்வராக முன்மொழிவதில்லை. இருந்தாலும் நான்காவது இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அபரிதமிதமாக இருக்கிறது.
கூட்டணி அறிவிக்கும்பொழுது அது பற்றி கேளுங்கள். கூட்டணி குறித்து அறிவிக்கும் பொழுது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். கருத்துக்களை கருத்துக்களாக பேசியிருக்கிறோம். Ncrb புள்ளி விவரங்களை விரைவில் தரச் சொல்லி நானும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். மாநில அரசு டேட்டா கொடுத்தால்தான் ncrbயில் வரும்.
சீமான் அவர்களை பாராட்டுகிறேன். அவருடைய கொள்கை வேறு. தேசிய ஜனநாயக கூட்டணி வரும் காலத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். அதிமுகவின் தலைமையை மாற்ற பா.ஜ.க முயல்கின்றதா என்ற கேள்விக்கு தமிழகத்தில் 1000 வேலைகள் இருக்கிறது. இதுதான் எங்கள் வேலையா?. எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர். அவர் அவருடைய கட்சி தொண்டர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அதிமுகவில் இருக்கும் பிரச்சனைக்குள் செல்ல விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி எதற்கு இன்னொரு கட்சியில் தலையிட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவராக அமைச்சர் அமித்ஷாவை போய் பார்த்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சி இன்னொரு கட்சியை அழித்து வளரும் என்றால் பாஜகவும் அழிந்துவிடும் என்று தான் சொல்லி வருகின்றேன். பாஜக எந்த கட்சியையும் அளித்து வளராது. யாரோ விமானம் ஏறி வந்து யாரையோ பார்க்கும் விஷயங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. அதிமுகவில் இருக்கும் கோர்ட் வழக்குகள் அவருடைய பிரச்சனை. இதில் எங்களுக்கு எந்த பாத்திரமும் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அதிக போராட்டம் நடத்தியது பாஜக. என்மேல் அதிகப்படியான வழக்கும் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை தீர்க்கமாக எதிர்த்து தினமும் பேசுவது பாஜக தான். வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம் பின்னால் இருக்கிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். என்னுடைய சொந்த நிறுவனத்தில் இருந்து எனக்கு சம்பளம் வாங்குவதில்லை. என்னுடைய நிறுவனத்தில் 40 சதவீதம் பங்கு எனக்கு இருக்கிறது. ஆனால் அங்கிருந்து சம்பளம் வாங்குவதில்லை.
இரண்டு வாரம் கழித்து எங்கு இருப்பேன், தனிநபராக என்ன செய்வேன் என்பது எனக்கு தெரியாது. ஐபிஎஸ் ரேங்கில் என்னுடைய ரேங்க் 2. சொந்தமாக நின்று நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். தன்மானம் கொஞ்சம் அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications