தொடர்ந்து 16 ஆண்டுகள் தலைவர் பதவியில்! வருமானத்துக்கு அதிகமாக சொத்து! அதிமுக பிரமுகர் மீது வழக்கு!
கோவை: கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் தொடர்ந்து 16 ஆண்டுகள் தலைவராக இருந்த அதிமுக பிரமுகர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சித் தலைவர் சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்தி வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இப்போது முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் இல்லங்களிலும் சோதனையை தொடங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள எண்.4 வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த கே.வி.என்.ஜெயராமன் இருந்தார். கடந்த 2001 முதல் 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்து 16 ஆண்டுகள் தலைவராக இருந்த இவரும் இவருடைய மனைவி கீர்த்தியும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.45 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

சொத்துக்குவிப்பு
அந்த சொத்து மற்றும் நகைகள் அவரது பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.வி.என்.ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி உள்ளிட்டோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிரடி ரெய்டு
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த சில மாதங்களாக அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் துருவி துருவி விசாரிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர் களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்ழகன், கேசி வீரமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முக்கியப் புள்ளிகள்
கோவை வடக்கு மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவில் முக்கியப் பிரமுகராக வலம் வருபவர் கே.வி.என்.ஜெயராமன். இந்நிலையில் அவர் மீதும் அவரது மனைவி மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிகழ்வு மற்ற அதிமுக முக்கியப் புள்ளிகளுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications