கோவைக்கு அக்டோபரில் அதிசயம்.. அவிநாசி சாலை மேம்பாலம் திறக்க போறாங்களாம்!
கோவை: கோவை மாவட்டத்தின் இதயப் பகுதியான அவிநாசி சாலையில் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாலமாக அமைந்து வரும் நிலையில், இந்த மேம்பாலம் எப்போது திறக்கப்படும் என்று கோவை மக்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் அவிநாசி சாலை மேம்பாலம் திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலில் கோவை முக்கிய இடத்தில் உள்ளது. தொழில்துறை, ஐடி, கல்வி, மருத்துவம் சார்ந்த துறைகளில் கோவை பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. தமிழ்நாட்டிலும் தலைநகர் சென்னைக்கு அடுத்து வேகமாக வளரும் நகரமாக கோவை இருக்கிறது.

10 கிமீ தொலைவில் அவிநாசி மேம்பாலம்
கோவை மாவட்டத்தின் உள்கட்டமைப்புக்கு மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். கோவை விமானநிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு காகித அளவிலேயே உள்ளன.
இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் அவிநாசி சாலையில் ரூ.1,790 கோடி மதிப்பில் 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. தென்னிந்தியாவிலேயே நீளமான மேம்பாலம் என்ற பெயரை பெற்றது. கோவை உள்கட்டமைப்பில் அவிநாசி சாலை முக்கிய பகுதியாகும். ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், விமான நிலையங்கள் அங்கு தான் உள்ளன.
இறுதிகட்ட பணிகள்
திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தினசரி பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த வழித்தடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேம்பாலம் அமைவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு இந்த பாலத்தை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீலாம்பூர் வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10.10 கி.மீ தொலைவிலான மேம்பால பணிகள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்தப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
அக்டோபரில் திறப்பு
சுமார் 17.5 மீ அகலத்தில் 4 வழிச்சாலையாக மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. பயணிகளின் வசதிக்காக அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப்ஸ் கல்லூரி, விமான நிலையம் பகுதிகளில் ஏறு மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 98 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சின்ன சின்ன பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ள. ரெஸிடென்ஸி ஹோட்டல் அருகே ஒரு ஏறுதளம் அமைக்க வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்கு மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இந்த மாத இறுதிக்குள் சோதனை ஓட்டம் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க திட்டமிட்டுள்ளோம். முதலமைச்சர் ஸ்டாலின் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அதன்பிறகு நீலாம்பூர் வரையிலான நீட்டிப்புப் பணிகள் முழு வீச்சில் தொடங்கும்." என்றனர்.












Click it and Unblock the Notifications