கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர்
கோவை: தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம், வியூகங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரச்சார களத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு வியூகத்தை கடைபிடிப்பார்கள். வாக்காளர்களை கவர்வதற்காக நூதன பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். சூலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்யத அண்ணாமலை, வேட்பாளரின் பெயரான கந்தசாமிக்கு பதிலாக பழனிசாமி என்று குறிப்பிட்டது சர்ச்சையாகயுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வி.பி.கந்தசாமி, திமுக சார்பில் தளபதி முருகேசன் போட்டியிடுகிறார்கள். சூலூர் தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி கொண்டிருக்கிறது. அங்கு கந்தசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற கந்தசாமியும், முதல்முறை வெற்றி பெற முருகேசனும் களமாடி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது உறுதி
சூலூர் தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில், அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டனர். மே 4ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி.
கடந்த 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு காலகட்டம். கடந்த 5 வருடங்களில் மட்டும் தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட படுகொலைகளும் 2,000க்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அரங்கேறின. குறிப்பாக குழந்தைகள் மீதான போக்சோ சட்டத்தின் கீழ் சுமார் 4,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
அத்திக்கடவு அவிநாசி 2.0
பள்ளிகளில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. அதனைத் தடுக்க இந்த அரசு தவறிவிட்டுள்ளது. கோவை மாவட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் திமுகவினர் பேசி வருகிறார்கள். இப்பகுதி மக்களின் உழைப்பை மதிக்காத திமுகவிற்கு இந்த மண்ணில் இடமில்லை. மத்திய அரசு கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 2,550 கோடி ரூபாயும் ரயில்வே மேம்பாட்டிற்காக கோடிக்கணக்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது. இவர்கள் எதையுமே செய்யவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் நிறைய பொய் பேசி வருகிறார். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை திமுக அரைகுறையாக நிறைவேற்றியதால் சூலூர் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அத்திக்கடவு 2.0 திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். நெசவாளர்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கும் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும்.
உளறிய அண்ணாமலை
கல்விக்கடன் ரத்து மற்றும் அரசு வேலைவாய்ப்பு என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. சூலூர் தொகுதியில் இரண்டு முறை சிறப்பான பணிகளை மேற்கொண்ட கந்தசாமியை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்றார். அப்போது கந்தசாமி என்பதற்கு பதிலாக அண்ணாமலை பழனிசாமி என்று குறிப்பிட்டார். இதனால் அதிமுகவினர் குழப்பமடைந்தனர்.












Click it and Unblock the Notifications