கோவையில் அண்ணாமலைக்கு எதிராக மாபெரும் சதித்திட்டம்.. கொதிக்கும் பாஜக.. பரபரப்பு கோரிக்கை
கோவை: அதிகாரிகள் துணையுடன் தி.மு.க.வினர் அதிகார அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி உள்ள தமிழக பாஜக, கோவை தொகுதிக்கு வேறு மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:"கோவையில் போட்டியிடும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் வெற்றி உறுதியாகி விட்டது. அண்ணாமலையின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. எதையும் செய்வதற்கு துணிந்து விட்டது.

மாநில அரசு கையில் இருப்பதால் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் துணையுடன் அதிகார அத்துமீறலில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர். இரவு 10 மணிக்குள் தனது பிரசாரத்தை முடித்துவிட்டு, வாகனத்தில் வந்த அண்ணாமலை மீது, வேண்டுமென்றே இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
அதுமட்டுமல்லாது பாஜகவினர் மீது தகராறு செய்து பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு முன்பு பாஜக நிர்வாகிகளை கைது செய்யும் மாபெரும் சதித்திட்டத்துடன் தி.மு.க.வினர் செயல்பட்டுள்ளனர். மக்கள் ஆதரவுடன் அண்ணாமலையை வீழ்த்த முடியாது என்பதால் குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர். தி.மு.க. நிர்வாகிகள் போல செயல்படும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும். கோவை தொகுதிக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும்" இவ்வாறு ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
பிரச்சனை என்ன? கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு ஆதரவாக ஆவாரம்பாளையத்தில் பாஜகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேர்தல் விதியை மீறி 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதையறிந்ததும் அந்த பகுதிக்கு திமுகவினர் சிலர் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் பாஜகவினரிடம் சென்று 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.
அப்போது தி.மு.க.வினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இந்த மோதலில் தி.மு.க.வை சேர்ந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே ஆவாரம்பாளையம் பகுதியில் பரப்புரையின் போது திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது திமுகவை சேர்ந்த குணசேகரன் என்பவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், பாஜகவை சேர்ந்த ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகிய 4 பேர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அநாகரீகமாக வசைபாடுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, கோவை ஆவாரம்பாளையத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பரப்புரையில் ஈடுபட்டதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications