ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு.. மிரட்டிய கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது..15 நாட்கள் சிறை
கோவை: திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தம ராமசாமி கைதைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பீளமேடு பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட உத்தம ராமசாமியை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில், "தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" என்று ராசா பேசியிருக்கிறார்.

கோவையில் புகார்
இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்து அமைப்பினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். காவல் நிலையங்களிலும் ஆ.ராசாவிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

மத துவேஷ கருத்துக்கள்
அதில்,''கடந்த 5ஆம் தேதி ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட திமுகவை சேர்ந்த நீலகிரி எம்.பி ஆ.ராசா இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பற்றி அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சினால், இந்துக்கள் அனைவரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். மத துவேஷ கருத்துகளை பேசிய ஆ.ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

கடையடைப்பு போராட்டம்
இதனிடையே ஆ.ராசா பேசியதற்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என நீலகிரி எம்.பி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து கடைகள் அடைக்கப்பட்டது.

அன்னூரில் கைது
அன்னூரில் மருந்துகடை, அரிசிகடை, பூக்கடை உட்பட ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. அன்னூர் கடைவீதிகளில் கடைகளை திறக்க கூடாது என கூறி வலம் வந்ததாக பா.ஜ.க வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு அன்னூர் அவிநாசி ரோட்டில் உள்ள மகரிஷி மஹால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை பாஜக தலைவர் கைது
இதனிடையே ஆ.ராசாவைக் கண்டித்து பாஜக தலைவர்கள் பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து த.பெ.தி.க.வினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து புகாரை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த பிறகு உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பதற்றம்
இந்தநிலையில், கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பீளமேடு காவல்நிலையம் அருகே பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தம ராமசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 நாட்கள் சிறை தண்டனை
இதனிடையே உத்தம ராமசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கோவையில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, சிவராம் நகரில் உள்ள நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications