லியோ படம் பார்த்தீர்களா என கேட்ட நிருபர்கள்.. வானதி சீனிவாசன் ஜாலி பேச்சு.. என்ன சொன்னார் தெரியுமா?
கோவை: லியோ படம் எப்படி இருக்கிறது என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேட்டுள்ளார்.
கோவை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியான போது நான் வீட்டில் இருந்தேன். அதனால் பார்த்தேன். நீங்கள் எல்லாம் படம் பார்த்துவிட்டீர்களா, படம் எப்படி இருக்கு?

நல்லாயிருக்கா, நேரமே இருக்கமாட்டேங்கிதுப்பா! தொடர்ந்து பயணம் மேற்கொண்டே இருந்தேன். நேற்று இரவுதான் கோவைக்கு வந்தேன். இன்று காலை சங்கமேஸ்வரர் கோயிலில் பூஜைக்கு வந்துவிட்டேன். விடுமுறை நாட்களில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்த்துவிடலாம். நம் பசங்ககிட்ட கேட்டேன், நல்லாயிருக்குனு சொன்னாங்கள். தைரியம் வேண்டுமா, அது எங்களுக்கு நிறைய இருக்கிறது.
தமிழகத்தை பொருத்தமட்டில் சினிமா, அரசியல் என இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது. ஒன்றுக்கு ஒன்று கலந்திருக்கிறது. அரசியல் செய்யறதை விட்டுவிட்டு நல்ல ஒரு பொழுதுப்போக்கு படம் இருந்தால் போய் பார்ப்பதில் தவறில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் உங்களுக்கே தெரியும். கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே தீவிரவாதி ஒருவர் தனது காரில் சிலிண்டர் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பெரிய பாதிப்பை ஏற்படுத்த நினைத்திருக்கிறார்கள்.
இதில் ஒரு பெரிய குரூப்பே இருக்கிறது. நல்லவேளையாக இறைவன் சங்கமேஸ்வரர் அருளால் கோயில் வாசலில் அந்த விபத்து ஏற்பட்டு அதன் வாயிலாக கோவை பாதுகாக்கப்பட்டது. அந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
கோவை மாநகரம் இது போல் ஒரு பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதை மாநில அரசு புரிந்து கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அந்த நாளையொட்டி இன்று காலை கோயிலில் கோவையின் பாதுகாப்பிற்காகவும் அமைதிகாகவும் வழக்குக்காகவும் ஒரு சிறப்பு வழிபாடு நடத்தினோம்.
தமிழகத்தில் முக்கியமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் , புகார் அளித்தாலும் அதை பதிவு செய்வது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த மாநில அரசின் மீது இருக்கிறது. இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாத மாநில அரசு தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சமூகவலைதளங்களில் சிறு பதிவை செய்தாலும் உடனடியாக வழக்கு பாய்கிறது.

பிரதமர் நரேந்தி மோடியை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக திமுக விமர்சித்துள்ளது. இன்று கூட திமுகவின் நிர்வாகிகள் பலர் மிகவும் கேவலமான முறையில் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எங்கள் கட்சியின் சாதாரணமான தொண்டர்கள் ஒரு கருத்தை பதிவிட்டால் உடனே தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். இதை பாஜக சார்பில் நாங்கள் கண்டிக்கிறோம். அரசின் ஒரு தலைபட்சமான நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என வானதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications