2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறி.. தமிழகத்தில் களமிறங்கிய ஜேபி நட்டா.. கோவையில் இன்று பாஜக வியூகம்
கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழகம் வந்தார். கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியை குறிவைத்து இன்று மேட்டுபாளையத்தில் நடந்த பாஜக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் 2வது முறையாக ஆட்சி செய்யும் பாஜக, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய முயன்று தேர்தல் பணிகளை துவங்கி உள்ளது.
வடமாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள நிலையில் தென்மாநிலங்களில் கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் பாஜகவுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலை உள்ளது.

தென்மாநிலங்களுக்கு பாஜக குறி
கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்குடன் திகழும் நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில கட்சிகள் தான் மக்களின் ஆதரவை பெற்று அசைக்க முடியாத வகையில் செயல்பட்டு வருகின்றன. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்மாநிலங்களில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் தான் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

ஆபரேஷன் சவுத் திட்டம்
மேலும் தென்இந்தியாவை சேர்ந்த இளையராஜா, பிடி உஷா உள்பட பலருக்கும் நியமன எம்பி பதவி கொடுக்கப்பட்டது. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென்மாநிலங்களில் கடந்த முறையை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆபரேசன் சவுத் எனும் பெயரில் பாஜக பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துள்ளது.

தீவிர பணியில் பாஜக
முதற்கட்டமாக அனைத்து துறைகளை சார்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களுக்கு சென்று மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அதுபற்றி பேசி வருகின்றனர். மேலும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அடிக்கடி விசிட் செய்து கட்சி தலைவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். பிரமதர் மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

முகவர்கள் கூட்டம்
இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலின் ஒருபகுதியாக ஜேபி நட்டா இன்று தமிழகம் வந்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நாலு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இந்த கூட்டத்தில் கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி, மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

பொதுக்கூட்டம்
வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்து முடிந்தவுடன் அதே பகுதியில் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆலோசனை மற்றும் பொதுக்கூட்டங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜகவின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

ஆ ராசாவுக்கு செக்
இதில் நீலகிரி என்பது திமுகவின் துணை பொதுச்செயலாளரான ஆ ராசாவின் தொகுதியாகும். இவர் தற்போது நீலகிரி தொகுதி எம்பியாக தான் உள்ளார். இந்த தொகுதியில் கவனம் செலுத்துவதன் மூலம் ஆ ராசாவுக்கு செக் வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் ஆ ராசாவை எதிர்த்து அந்த தொகுதியில் மத்திய அமைச்சர் எல் முருகன் களமிறக்கப்படலாம் என தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications